
கோலிவுட்டில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகிய ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. அந்த படம் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றதால், அட்லீ படத்தின் மீது ரசிகர்களுக்கு அளவார்ந்த நம்பிக்கை ஏற்படுத்தியது.
அது மட்டுமின்றி ராஜா ராணி படம் ரூ.50 கோடி வசூலை செய்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல் என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார். தொடர்ந்து இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால், தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் அட்லீ.
தற்போது மூன்றாவது முறையாக விஜயை வைத்து பிகில் படத்தை இயக்கியிருக்கிறார். நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தை ஏ.ஜி. எஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. பிகில் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த படத்தை அட்லீ யாரை வைத்து இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த வகையில் அடுத்ததாக அட்லீ, ஷாருக் கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை ஷாருக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்ப்பாகிறது.