
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் நான்கு பேர் உடல்நிலையை கண்காணிக்கும் ஆடையை கண்டுபிடித்துள்ளனர்.
நோயாளிகள், முதியவர்கள் ஆகியோரின் உடல்நிலையைக் கண்காணிக்கும் இந்த சென்சார் பொருத்தப்பட்ட ஆடையை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். மேலும் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இவர்களின் கண்டுபிடிப்பு முதல் பரிசினைத் தட்டவிருக்கிறது. பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் துறையில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவிகளான சுஷ்மிதா, சன்மதி, விஷாலி, தனஸ்ரீ ஆகிய நால்வரும் சேர்ந்து கல்லூரி நிர்வாகத்தின் உதவியுடன் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் முதியோர்களின் உடல்நிலையை கவணிக்க இயலாமல் பலரும் இருக்கின்றனர். அதற்கு மிகவும் உதவிகரமாக இந்த கண்டுபிடிப்பு அமையுமென்று நம்பப்படுகிறது. நோயாளிகளின் உடல்நிலையை கண்காணிப்பதற்கும் இது உதவியாக இருக்கும். மேலும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆட்டிசம் உள்ளவர்கள் ஆகியோரின் உடல்நிலையை கண்காணிப்பதற்கு சவாலாக இருக்கும். அவர்களுக்கு இந்த சென்சார் பொருத்தப்பட்ட ஆடை உதவியாக இருக்கும். அதாவது அவர்களின் ரத்த அழுத்தம், இதய செயல்பாடு, சுவாச செயல்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் கண்காணிக்கும் என்று மாணவிகள் கூறுகின்றனர்.
இந்த ஆடையில் பொருத்தப்பட்டிருக்கும் மின்னணு சாதனமானது கைப்பேயுடன் இணைக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம், இதனை அணிபவர்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் குடும்ப மருத்துவர்களுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும் என்ற மாணவிகள் கூறுகின்றனர்.