உலக குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்தியர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
உலக குத்துசண்டை போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 52 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற ஆசிய சாம்பியன் அமித் பங்கல் கஜகஸ்தான் நாட்டின் சகென் பிபோசினோவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுளார்.
“நான் நினைத்ததை விட அதிக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது என்றாலும், இந்த போட்டி எனக்கு மிகவும் நன்றாக இருந்தது. இது இந்திய குத்துச்சண்டை வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும். இதுவரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வெற்றிக்கு பின்னர் பங்கல் கூறினார்.

வரும் ஞாயிறு கிழமை, ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பேகிஸ்தானின் ஷாகோபிடின் சோயிரோவை எதிர்கொள்கிறார். இதற்கு முன்னர் நடந்த உலக போட்டியில் எந்த ஒரு இந்திய வீரரும் வெண்கல பதக்கத்தை தாண்டி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், மற்றோரு போட்டியில் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்ற கவுசிக், 0-5 என்ற புள்ளிகள் கணக்கில் பான்-அமெரிக்கன் கேம்ஸ் சாம்பியனான கியூபாவின் ஆண்டி கோம்ஸ் க்ரூஸிடம் தோல்வியை தழுவினார். இந்தியாவின் கவுசிக்கு இது முதல் உலக தொடராகும்.
உலக குத்துசண்டை போட்டியில் விஜேந்தர் சிங் (2009), விகாஸ் கிருஷ்ணன் (2011), கவ்ரவ் பிதூரி (2017) ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.