ஒரு வருடத்திற்கு மேலாக தாலிபான் இயக்கத்திடம் பிணை கைதிகளாக இருந்த மூன்று இந்தியர்களை விடிவித்துள்ளதாக தாலிபான் செய்தி பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட மூன்று இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக தலிபான் தலைவர்களில் ஷேக் அப்துர் ரஹீம் மற்றும் மவ்லாவி அப்துர் ரஷீத் உட்பட 11 போராளிகள் விடுதலை பெற்றுள்ளனர்.
ஆனால் இந்திய பிணை கைதிகளை ஆப்கானிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்களா? அல்ல அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனரா? என்பது குறித்து விபரம் ஏதும் கூறவில்லை என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடுவிக்கப்பட்ட போராளிகள் வரவேற்கப்படுவது போன்ற புகைப்படங்களை தாலிபான் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இது குறித்து ஆபிகானிஸ்தான் மற்றும் இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான் மாகாணத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் ஏழு இந்திய பொறியாளர்கள் தாலிபான்களால் சிறை பிடிக்கப்பட்டனர். இதில் ஒருவர், கடந்த மார்ச் மாதம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் மீதமுள்ளவர்கள் நிலை என்னவென்பது தெரியவில்லை.