
மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் துர்கா பூஜைக்கு வடிவமைக்கப்பட்டிருந்த பந்தல் இந்துமத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி விழா ஏற்பாட்டாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கோலாகலமாக நடந்துகொண்டிருக்கும் நவராத்திரா கொண்டாட்டங்களின் போது அஜான் (இஸ்லாமிய வழிபாட்டுக்கான அழைப்பு) பதிவு செய்ததற்காக கொல்கத்தாவில் உள்ள பெலியகட்டா 33 பாலி துர்கா பூஜா பந்தல் குழு மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் வழக்கறிஞர் சந்தானு சிங்கா “மேற்கு வங்கத்தின் அமைதியைக் குலைத்துவிட்டார். இந்து மதத்தின் உணர்வுகளைத் தாக்கினார்” என்று 10 நபர்களை பெயரிட்டுள்ளார். பெலியகட்ட துர்கா பூஜா பந்தலில் அஸான் வீடியோ இயக்கப்பட்டதாக விஷ்வ இந்து பரிஷத்தின் உறுப்பினர்கள் அவருக்கு செய்தி அனுப்பியுள்ளதாக அவரது புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால் பூஜை குழு மதச்சார்பின்மையை ஊக்குவிப்பதே தனது நோக்கம் என்று கூறியுள்ளனர். பெலியகட்டா 33 பாலி கிளப்பின் செயலாளர் தாங்கள் “நாம் ஒன்றாக இருக்கிறோம், தனியாக இல்லை” கருப்பொருளைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார். எனவே கொண்டாட்டங்களின் போது அஸான் இயக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
“கருப்பொருளை நிரூபிக்க, நாங்கள் தேவாலயம், கோயில் மற்றும் மசூதி மாதிரிகள் பயன்படுத்தினோம், அவற்றின் சின்னங்களையும் பயன்படுத்தினோம். மனிதநேயம் எல்லா மதங்களுக்கும் மேலாக இருப்பதைக் காண்பிப்பதே எங்கள் நோக்கம்”
என்று கிளப் செயலாளர் கூறினார். மேலும் தேவையில்லாமல் அரசியலாக்குவதாகவும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.