
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏழாவது நாளான இன்று மலையப்ப சுவாமி, தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீ பத்ரி நாராயணன் அவதாரத்தில் எழுந்தருளினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று (அக்டோபர் 5) காலை மலையப்பசுவாமி அனுமன் வாகனத்தில் ராமர் அலங்காரத்தில் நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரேதா யுகத்தில் ராமருக்கு சேவை செய்த பக்தனான அனுமனின் சேவையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் மலையப்பசுவாமி, அனுமன் வாகனத்தில், ராமர் அலங்காரப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். மாலை 4 மணி முதல் 6 மணி வரை 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேத தயார்களுடன் எழுந்தருள பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மாடவீதியில் வலம் வரும் வைபவமும் கோலாகலமாக நடைபெற்றது.
பிரமோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீபத்ரி நாராயணன் அவதாரத்தில் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வீதிஉலா நடைபெற்றது.ஏழு குதிரைகள் பூட்டியது போன்ற ரதத்தில், சூரியனுக்கு சாரதியாக, மலையப்ப சுவாமி ஸ்ரீபத்ரி நாராயணன் அலங்காரத்தில் சிவப்பு மாலை அணிந்து வந்து, சூரியபகவனின் பிரத்தி ரூபம் தானே என்பதை எடுத்துக்கூறும் விதமாக இந்த வைபவம் நடத்தப்படுவதாக ஐதீகம் கூறப்படுகிறது.