
லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கும் படம் பொன்னியின் செல்வன். கல்கி என்ற நாவலை கருவாக கொண்டு உருவாகி வரும் இந்த சரித்திரப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதுவரை 2 கட்டமாக 40 சதவிகிதம் வரை படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கினாலும் சமூக விலகல் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம் என்ற சூழல் நிலவுகிறது.
சரித்திர படம் என்றாலே பிரமாண்டமாக உருவாக்க வேண்டியது அவசியம். எனவே ஒருநாளைக்கு ஆயிரம் பேர் வரை பணியாற்றுவார்கள். இதன் காரணமாக பொன்னியின் செல்வன் கைவிடப்படலாம் என்று தகவல் வெளியாகி இருந்தது. இதனை மறுத்த மணிரத்னம் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். கொரோனா ஊரடங்கு சீரான நிலையை அடையும் பட்சத்தில் படப்பிடிப்புகளை எவ்வாறு நடத்தலாம் என்பதை பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்ட மணிரத்னம் இதுகுறித்து கூறிய அறிக்கையில், கொரோனா ஊடரங்கால் பொன்னியின் செல்வன் தடைபட்டிருப்பது மிகவும் வருந்த தக்கது.
இந்த படத்தில் பிரமாண்டமான போர் காட்சிகள் இனிமேல்தான் படமாக்கப்பட உள்ளது. இதனை அடுத்து இதற்கு பல எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்துடன்தான் இக்காட்சிகளை படமாக்க முடியும். இந்த காட்சிகளை எப்படி படமாக்கப்போகிறேன் என்றும் எனக்கு தற்போது யோசனை இல்லை. எவ்வாறாயினும் அதை செய்து முடிப்பேன். நான் ஒரு தொழில்முறை கலைஞன், அதற்கான ஊதியத்தை நான் வாங்குகிறேன். அதனால் அதை படமாக்கி காட்டுகிறேன். அது எப்படி செய்து முடிப்பேன் என்பதை படப்பிடிப்பை முடித்து விட்டு சொல்கிறேன், என்றார் மணிரத்னம்.