அஸ்ஸாமில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை

வெளியிட்டது

குடியுரிமை தடைச்சட்ட மசோதாவை எதிர்த்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால், வரும் 22 ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அஸ்ஸாம் மாநில பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதா நேற்று (புதன்கிழமை) நிறைவேறியது. 
இந்நிலையில், இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில், வடகிழக்கு மாநில மாணவர் சங்கத்தினர் சார்பில், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

தொடர்ந்து போராட்டங்கள் வலுத்து வருவதால் அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தி உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, அஸ்ஸாமுக்கு ஒரு ராணுவ படைப் பிரிவும், திரிபுராவுக்கு இரண்டு ராணுவப் படைகளும் புதன்கிழமை விரைந்தன. 

இந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களின் பல இடங்களில் போராட்டம் உச்சத்தை அடைந்தது. சில இடங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடியும், வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இருப்பினும், வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஓய்வதாக இல்லை. இதையடுத்து, மாநிலம் முழுவதும் வரும் 22 ஆம் தேதி (டிசம்பர் 22) வரை, அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக, அஸ்ஸாம் மாநில பள்ளிக் கல்வித் துறை இன்று (வியாழக்கிழமை) அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. 

பள்ளிகளுக்கு கோடை முறை, மழைக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்த நிலையில், போராட்டம் காரணமாக வடக்கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Kiruthika

அகந்தை முன்னே செல்லும், அவமானம் பின் தொடரும். I've danced to AR Rahman's tunes and cheered for Rajinikanth, and now, I'm your go-to journalist for all things Tamil entertainment, offering an insider's perspective that's second to none.

வெளியிட்டது

புதிய செய்திகள்