தமிழ் சினிமா சற்று வித்தியாசமானது. இந்தியாவின் பல மாநிலங்களில் சினிமா ஷூட்டிங் என்றால் என்னவென்றே தெரியாத காலத்திலேயே பல முன்னேற்றங்களை கண்டது தமிழ் சினிமா. இன்று அதையெல்லாம் கடந்து ஹாலிவுட் ரேஞ்சுக்கு முன்னேறி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. பல தொழில்நுட்பங்கள், கிராஃபிக்ஸ் என அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ் திரை உலகம். இதில் முக்கிய பங்காற்றுபவர்கள் இயக்குனர்கள். சிறந்த கதைக்களம், நடிகர்கள் தேர்வு, ஸ்கிரீன் ப்ளே, திருப்பங்கள் என தங்களது படைப்புகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர். நல்ல படங்களை கொடுப்பதன் மூலம், பல முண்ணனி நடிகர்கள் இவர்களின் இயக்கத்தில் நடிக்க விரும்பும் அளவிற்கு நடிகர்களையும் கவர்ந்து இழுத்து விடுகின்றனர்.

அப்படிப்பட்ட மூன்று இளம் இயக்குனர்கள் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கின்றனர். இவர்கள் இயக்கிய படங்கள் அனைத்துமே ப்ளாக் பஸ்டர் படங்கள்தான். இவர்கள் எடுத்த படங்கள் தோல்வி பெற்றதே கிடையாது. அந்த மூன்று பேர் வெற்றிமாறன், அட்லீ, லோகேஷ் கனகராஜ். வெற்றிமாறனைப் பொறுத்த வரை சமூக அக்கறை சார்ந்து படம் எடுப்பவர். இவர் படங்களில் ஏதாவது ஒரு சமூக கருத்தை ஆணித்தரமாக சொல்லிவிடுவார். இவர் மொத்தம் ஐந்து படங்களை இயக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன். இந்த படங்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட் அடித்த படங்கள். குறிப்பாக அசுரன் படமும், ஆடுகளமும் தேசிய விருதுகளை குவித்த படங்கள் ஆகும். தற்போது வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடி வாசல் படத்தை இயக்கி வருகிறார்.

அடுத்த வெற்றி இயக்குனர் அட்லீ, இவரின் இயக்கிய முதல் படமான ராஜா ராணி மிகப்பெரிய வெற்றி பெற்றது, தொடர்ந்து இவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் போன்ற அனைத்துப்படங்களும் மாஸ் வெற்றிதான். தற்போது அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படமும் வெளியாகவுள்ளது. அடுத்த படியாக லோகேஷ் கனகராஜ், இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். இந்த நான்கு படங்களுமே பெரிய ஹிட். குறிப்பாக மாஸ்டர் படம் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்த நிலையில், தற்போது விக்ரம் வெளியான ஐந்தே நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியிருக்கிறது.

தாங்கள் இயக்கும் படங்கள் தோல்வியை சந்திக்காமல் மிகப்பெரிய வெற்றி அடைவதால் இந்த மூன்று முண்ணனி இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கின்றனர். இவர்களால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று அவர்களது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.