மீரா மிதுன் பேசும் போது அருகில் சும்மாதான் நின்றிருந்தேன் என் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மீரா மிதுனின் நண்பர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களின் மூலம் அறிமுகமானவர் மீரா மிதுன். அதற்கு முன்னதாகவே மாடல் துறையில் இருந்து வருகிறார். தான் ஒரு சூப்பர் மாடல் என்று அவர் தன்னை தானே கூறி வந்தார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். கலந்து கொண்ட நாள் முதலே ஏதாவது சண்டை, சர்ச்சரவு என அதிருப்தியை ஏற்படுத்தினார். இதனால் அவரை மக்கள் பாதியிலேயே வெளியேற்றினர். வெளியேறிய பின்பும் பெரிதாக எதுவும் பட வாய்ப்புகள் வராத நிலையில் தனது யூடியூப் சேனலில் முண்ணனி நடிகர்கள், இயக்குனர்கள் என அனைவரையும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் விமர்சித்து வந்தார். எதிர்மறை விமர்சனங்கள் மூலம் பிரபலம் ஆகலாம் என்ற கனவில் இருந்தார் மீரா மிதுன்.

இந்த சர்ச்சை பேச்சுக்கள் ஒரு கட்டத்தில் அளவு மீறி போக, ஒரு நாள் லைவ்வில் தனது ஆண் நண்பருடன் பட்டியலின சமூக மக்களையும் தவறாக பேசினார். இதனால் கோபமடைந்த சில கட்சிகள் அவர் மீது புகார் அளித்தனர். இதன் பின் கேரளாவில் சென்று தலைமறைவான அவரை அவரது போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சிறையில் அடைத்தனர். சில நாட்கள் ஜெயிலில் இருந்த அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மீண்டும் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக சொல்லி நீதிபதி உத்தரவிட்டும் ஆஜராகாததால் அவரை கைது செய்ய ஜாமினில் அவர் வெளியே வரமுடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

தற்போது இந்த வழக்கில் சிக்கியிருக்கும் மீரா மிதுனின் ஆண் நண்பர் அபிஷேக் ஒரு மனுவை தொடர்ந்துள்ளார். அதில் பட்டியல் இன மக்கள் குறித்து மீரா மிதுன் பேசும் போது தான் அருகில் சும்மாதான் நின்றேன் எனவும், தான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும், எனவே தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனு தொடுத்து இருந்தார். ஆனால் மீரா மிதுன் இவ்வாறு பேச உறுதுணையாக இருந்த காரணத்தினால் இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மீரா மிதுனுடன் அவரது ஆண் நண்பரும் ஜெயிலில் களி தின்பது உறுதியாகியுள்ளது.