
டாக்டர் எம். ஜி. ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இன்று டாக்டர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று கெளரவமான டாக்டர் பட்டம் பெற்றார்.
முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மக்கள் நலத்திட்டங்களைச் சிறப்பாக செய்ததற்காக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் டாக்டர் பட்டத்தைப் பெற்ற தமிழ்நாட்டின் மூன்றாவது அஇஅதிமுக முதலமைச்சர் ஆவார். இதற்கு முன்பு தமிழ்நாட்டின் முன்னாள் அஇஅதிமுக முதலமைச்சர்கள் எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளனர். பட்டம் பெற்ற பிறகு, கெளரவ டாக்டர் பட்டம் தனது பொறுப்பை அதிகரித்துள்ளது என்று முதல்வர் கூறினார். மேலும் மத்திய அரசு ஆறு மருத்துவக் கல்லூரிகளை மாநிலத்தில் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
பின்பு முதலமைச்சர் அவர்கள் டிஆர்டிஓ தலைவர் ஜி சதீஷ் ரெட்டி, இசை இயக்குனர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகரும் நடனக் கலைஞருமான ஷோபனா சந்திரகுமார் மற்றும் கங்கா மருத்துவமனையின் தலைவரும் இயக்குநருமான எஸ்.ராஜா சபாபதி ஆகியோருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.