நடிகர் விஜய் நடிப்பில் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்த படம் “பிகில்”. “தெறி, மெர்சல்” போன்ற வெற்றி படங்களை விஜய்க்கு கொடுத்த இயக்குனர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி வைத்து, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் மிக பெரிய பொருட்செல்வத்தில் தயாரிக்க நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி என பலர் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு அதில் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த ஒரு ரவுடி கதையும் சேர்ந்து நேர்த்தியாக வெளியாகி இன்றளவும் விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக இந்த படம் உள்ளது. கிட்டத்தட்ட 300 கோடி வசூலை இந்த படம் எடுத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் ஒரு நடிகர் ஒருவரின் படம் வெளியாகும் பொது திரையரங்களில் டிக்கெட்டின் விலை கூடுதல் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் ரசிகர்கள் முந்திக் கொண்டு டிக்கெட் வாங்கி எப்படியாவது முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என அலப்பறை செய்வதால் அந்த விலைக்கு எளிதாக திரையரங்கு உரிமையாளர்கள் விற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் பிகில் படத்தினை சென்னை செம்பியம் சத்தியநாராயணன் சாலையை சேர்ந்த தேவராஜன் அயனாவரம் பாரதி நகரில் உள்ள கோபிகிருஷ்ணா ருக்மணி தியேட்டரில் பார்க்கப் போயிருந்தார். இணையம் வாயிலாக இவர் 223.60 ரூபாய் கட்டணம் முன் பதிவு செய்து இருந்தார். இது அரசாங்கம் நிர்ணயித்த விலையை விட 113 ரூபாய் கூடுதல் கட்டணம் முரணானது.

இதை எதிர்த்து இவர் நுகர்வோர் மன்றத்தில் திரையரங்கின் மீது புகார் அளித்திருந்தார்.கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து திரையரங்கம் அதிகாரிகளிடம், போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூடுதலாக வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்துடன் 4.80 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அவர் சென்னை மாவட்ட வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையில் தியேட்டர் தரப்பிலிருந்து யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தியேட்டர் நிர்வாகம் நியாயமற்ற முறையில் செயல்பட்டதால் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை உடன் 5,000 ரூபாய் இழப்பீடு, 2000 ரூபாய் வழக்குச் செலவை மனுதாரருக்கு தியேட்டர் நிர்வாகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.