
தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வந்த விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் திரைக்கு வந்து இரண்டுமே நல்ல வசூலை கொடுத்தது.
இந்த படங்களுக்கு பிறமொழிகளில் ரீமேக் செய்யவும் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்து டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படம் வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்கள். சூப்பர் ஹீரோ கதையம்சத்தில் இந்த படம் தயாராகி உள்ளது என்று கூறியுள்ளனர்.
அதே நாளில் பாபநாசம் படத்தை எடுத்து பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படத்தையும் திரைக்கு கொண்டு வர முயற்சிகள் செய்யப்படுகிறது. இதில் சத்யராஜ், ஜோதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதுபோல் பொங்கல் பண்டிகையில் ரஜினிகாந்தின் தர்பார், கார்த்தியின் சுல்தான் ஆகிய 2 படங்களும் மோத இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ரஜினி தோற்றம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தியின் சுல்தான் படத்தை சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை எடுத்து பிரபலமான பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பில் புகுந்து சிலர் போராட்டம் நடத்தினர். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.