
தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பெரிதளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
காய்கறி சந்தைகளில் பெரிய வெங்காயத்தின் இறக்குமதி குறைந்து வருகிறது . கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.30 என்றிருந்த சூழலில் , தற்போது ரூ.60 வரை உயர்ந்து காணப்படுகிறது . பருவமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சின்ன வெங்காயத்தின் வரவும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளர்கள் பெரிதளவில் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவின் பேரில் சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றது.அதில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
இதில் சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாகவும், மொத்த விற்பனையாளர்கள் 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாகவும் வெங்காயம் வைத்திருக்க கூடாது.அப்படி ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக குழுக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு பணி மேற்கொள்ள இருக்கின்றனர். தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இதையொட்டி மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் சென்றுள்ளனர்.