பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து தற்போது வெளியேறி இருக்கிறார் என்கிற செய்தி வைரல் ஆகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 12 நாட்களை கடந்து விட்டது. எப்பொழுதும் 16 போட்டியாளர்களைக் கொண்டே தொடங்கப்படும் பிக்பாஸ் இந்த முறை 21 போட்டியாளர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் குறிப்பிடத் தகுந்த நபராக இருப்பவர் ஜிபி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் ஜிபி முத்து. இவர் ஆரம்பத்தில் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதில் இவர் தன்னை கேலி செய்பவர்களை, செத்த பயலே நார பயலே என்று திட்ட ஆரம்பித்தார். இவரின் இந்த வீடியோக்கள் வைரலான நிலையில் இவர் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். மேலும் இவருக்கு இவரது ரசிகர்கள் கடிதங்களை அனுப்பி வந்தனர். கடிதங்கள் மிக காமெடியாக இருந்ததால், அதை ஜிபி முத்து படிக்கத் தொடங்கியதால் தொடர்ந்து கடிதங்கள் குவியத் தொடங்கின.

டிக்டாக் செயலி முடங்கிய பிறகு youtube வலைதள பக்கத்தை தொடங்கிய அவர் தனக்கு வந்த கடிதங்களை படித்து வீடியோவாக வெளியிட்டார். அது மிகவும் காமெடியாக இருந்ததால் இவரது youtube சேனலுக்கு பின் தொடர்பவர்கள் அதிகமானார்கள். வீடியோக்களும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டத் தொடங்கியது. பின்னர் ஜிபி முத்துவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களிலும் அவர் நடித்து முடித்துள்ளார். தற்போது அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக அவர் கலந்து கொண்டார். வந்த நாள் முதல் காமெடி கலாட்டா என்று ஜிபி முத்து செய்து வந்தார். கமலையே சில இடங்களில் கலாய்த்து வந்தார்.

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் பார்த்து வந்த பலரும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதையே நிறுத்தி இருந்தனர். ஆனால் ஜிபி முத்துவின் வருகையால் பலரும் மீண்டும் பிக்பாஸை பார்க்கத் தொடங்கினர். இந்த நிலையில் தனது குடும்பத்தை விட்டு தான் பிரிந்து இருந்ததில்லை, தனது மகன் விஷ்ணுவிற்கு உடல்நிலை சரியில்லை, என்னை பிரிந்து அவன் இருக்க மாட்டான் என்று அடிக்கடி பிக்பாஸ் இடம் சென்று அழுது வந்தார் ஜி பி முத்து. மேலும் தன்னை வீட்டில் இருந்து வெளியேற்றும் படியும் அவர் கோரிக்கை வைத்து வந்தார். இந்த நிலையில் ஜிபி முத்துவை தற்போது பிக்பாஸில் இருந்து வெளியேற்றி இருக்கின்றனர். அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய செய்தி பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
