இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம், சுரபி, ரெடிங் கிங்ஸ்லி, பிரதீப் ராபர்ட், தங்கதுரை மொட்ட ராஜேந்திரன், முனீஷ்காந்த், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ். சந்தானம் நடிப்பில் முன்னதாக வெளியாகியிருந்த தில்லுக்கு துட்டு படத்தில் மூன்றாம் பாகம்தான் இந்த படம். தற்போது இந்த படத்தின் முழு விமர்சனத்தை காணலாம். புதுச்சேரியில் மிகப்பெரிய ரவுடியாக இருக்கும் பெப்சி விஜயன் தனது மகன் ரெடின் கிங்க்ஸ்லிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். பணம் கொடுத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அந்த பெண் விருப்பம் இல்லாமல் ஓடிவிட, அவரது தங்கை சுரபி திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். சுரபியின் காதலர் சந்தானம் அந்த பணத்தை திரும்ப கொடுத்து கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறார்.

இதற்கிடையே ரெடின் கிங்ஸ்லியின் அண்ணனாக இருக்கும் பெப்சி விஜயிடம் இருந்த பணம் நகைகளை முனீஷ்காந்த் குழு கொள்ளை அடிக்கிறது. அவர்களிடமிருந்து மொட்டை ராஜேந்திரன் குரூப் அந்த பணத்தை திருடுகிறது. பின்னர் மொட்டை ராஜேந்திரன் இருந்த பணம் நகைகள் அனைத்தும் சந்தானம் வசமாகிறது் பின்னர் போலீசுக்கு பயந்து சந்தானத்தின் நண்பர்களான மாறன், சேது இருவரும் அதை ஒரு பங்களாவில் கொண்டு ஒளித்து வைக்கின்றனர். பேராசை மனிதர்கள் பேய்களாக இருக்கும் அந்த பங்களாவில் ஒரு கேம் ஒன்றை விளையாடி வென்றால் பணம் கிடைக்கும், இல்லை என்றால் மரணம் என்கிற நிலை இருக்கிறது. இதனை சந்தானம் தொடங்கி மொட்டை ராஜேந்திரன் வரை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது தான் டிடி ரிட்டன்ஸ் படத்தின் மீதி கதை.

குளுகுளு, ஏஜென்ட் கண்ணாயிரம் படங்களுக்கு பின்னர் மீண்டும் காமெடி டிராக்கிற்கு திரும்பி இருக்கிறார் சந்தானம். பாடி ஷேமிங், அடல்ட் காமெடிகளை தவிர்த்து விட்டு டைமிங் காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகைச்சுவைகள் நிறைந்த படமாக இந்த படத்தை இயக்குனர் இயக்கியிருக்கிறார். எதிர்பாராத நேரத்தில் வரும் காட்சிகளிம் அங்கு டைமிங்கில் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்களும் படத்திற்கு மிகப்பெரிய வலுவாக அமைந்திருக்கிறது. சின்ன சின்ன கொள்ளை கும்பல், அவர்களுக்கு இடையே நடக்கும் பணப் பரிமாற்றம், கை மாறிக்கொண்டே இருக்கும் பணம், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வம், அதற்கு தகுந்தார் போல் பல இடங்களில் நுழைக்கப்பட்ட காமெடிகள் என்று பார்ப்பவர்களை சற்றும் சளைக்க வைக்காமல் விறுவிறுப்பாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. மையக்கதைக்குள் நுழையும் பொழுது வழக்கமான ஒரு பேய் பங்களா, உள்ளே நடக்கும் விளையாட்டு, அதில் அடுத்தடுத்த கட்டங்கள் என்று பழக்கப்பட்ட கான்செப்டாக இருந்தாலும் அதை ஒட்டி நடக்கும் காட்சிகள் பார்ப்பவர்களை இருக்கை நுனியில் அமர வைக்கிறது.

தேவையில்லாமல் பாடல்களோ, காதல் காட்சிகளோ வைத்து காமெடியை துன்புறுத்தாமல் படம் கதைக்கேற்றாற் போல் நகர்ந்தது மிகப்பெரிய ஆறுதல். தலன்னு சொல்லாதடா ஏ.கேன்னு சொல்லு, பிளடி ஸ்வீட், ரோலக்ஸ் போன்ற சமகால சூழலுடன் தொடர்பு உடைய வசனங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. வழக்கம் போல சந்தானத்தின் டைமிங், கலாய் பேச்சுக்கள், அசால்ட்டான உடல் மொழி என்று மீண்டும் தனது கம்போர் ஜோனிற்கு திரும்பி இருக்கிறார் சந்தனாத். தான் மட்டுமே காமெடி செய்ய வேண்டும் என நினைக்காமல் பழைய ஜோக் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனீஷ்காந்த். பெப்சி விஜயன், பிபின், தீபா ஆகிய அனைவருக்கும் காமெடிக்கு ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் சந்தானம். அதுவே இந்த படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமைந்திருக்கிறது. பேயாக வரும் பிரதீப் ராம் சிங் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். சுரபிக்கு பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

வழக்கமான பேய் படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எளிதில் யூகிக்க முடிந்த திரைக்கதையை எடுத்துக் கொண்டு, அதில் பல இடங்களில் எதிர்பார்க்காத காமெடி காட்சிகளை சேர்த்து, கணிக்க முடியாதபடி கதையை நகர்த்தி இருக்கும் இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். பாண்டிச்சேரியில் நடக்கும் கதையில் சந்தானத்தின் சென்னை ஸ்லாங் தேவை இல்லாத ஒன்றாக தெரிந்தது. மற்றபடி ஹாரர் பின்னணியில் தரமான காமெடி படம் ஒன்றை இந்த படக் குழு வழங்கியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இவர்களுடன் இசையலைப்பாளர் ஆஃப்ரோ, ஒளிப்பதிவாளர் தீபக்குமார், படத்தொகுப்பாளர் என்.பி ஸ்ரீகாந்த், ஏ.ஆர் மோகனின் கலை உள்ளிட்ட அனைத்தும் பாராட்டுக்குரியதாக இருக்கிறது. லாஜிக்கை எதிர்பார்க்காமல் காமெடியை மட்டும் நம்பி போனால் டி டி ரிட்டன்ர்ஸ் படம் ஒரு தரமான படமாக இருக்கிறது.! இந்த படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங்.! 4.0/5
YouTube Video Embed Code Credits: Think Music India