
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் 5–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது.
முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 294 ரன்களை எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 225 ரன்களை எடுத்து 69 ரன்கள் பின்னிலையில் இருந்து.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்களை எடுத்தது. இதில் ஜோ டென்லி 94 ரன்களையும் பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களையும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.
நான்காவது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை எடுத்திருந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 399 ரன்கள் குவித்தால் வெற்றி என்று களமிறங்கியது. தொடர்ச்சியிலேயே தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 77 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 263 ரன்களை மற்றுமே எடுத்திருந்தால் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரின் 5 போட்டிகளில் இங்கிலாந்து 2–2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் போட்டி மட்டும் டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். தொடர்நாயகனாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மென் ஸ்டீவன் ஸ்மித் அறிவிக்கப்பட்டார்.