ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையின் மிருகத்தனமான தாக்குதல் தொடர்பான மனுக்களை உயர்நீதி மன்றத்திற்கு கொண்டுசெல்லுமாறு உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து காவல்துறையினரும், துணை இராணுவ படையினரும் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். மேலும், நூலகத்திற்குள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதாக மாணவர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலானஅமர்வு, முன்னாள் மாணவர் சங்கம், ஜாமியா பல்கலைக்கழகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையைத் தொடங்கியது.
இந்த வழக்கின் தன்மை மற்றும் சர்ச்சைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆணையம் வைத்து விசாரணை செய்யலாம். ஆனால் அதற்கு முன்னர் உயர்நீதி மன்றத்தை அணுக வேண்டும். மாநில அரசின் கருத்துக்களை கேட்ட பின்னர், ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஆணையம் அமைக்கும் முழு சுதந்திரம் உயர்நீதி மன்றத்திற்கு உள்ளது என தெரிவித்துள்ளது.
மாணவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், மாணவர்கள் வன்முறையை எதிர்கொண்டதாக தனது வாதத்தை முன்வைக்கும் போது, வன்முறையில் மாணவர்கள் ஈடுபடும்போது அதிகாரிகள் என்ன செய்ய முடியும்? மாணவர்கள் கற்களை வீசும் போது, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, மாணவர்கள் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. அதேவேளையில், காவலர்களும் தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.