
மயிலாடும்பாறை என்ற ஊரில் பள்ளி சத்துணவு சமையல் கூடம் சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது. இது தீடீரென இடிந்து 3 மாணவர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில், படுகாயமடைந்த மாணவன் செல்வகுமாரின் வலது கை அகற்றப்பட்டிருக்கிறது.
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னன்படுகை என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, சத்துணவு தயார் செய்யும் சமையற்கூடம் திடீரென இடிந்து விழுந்ததில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி, 6ம் வகுப்பு மாணவர்கள் முத்துப்பாண்டி (12), ஈஸ்வரன் (12) மற்றும் 8ம் வகுப்பு மாணவன் செல்வக்குமார் (14) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் வலது கை சிதைந்து, பலத்த காயமடைந்த மாணவன் செல்வக்குமார், மேல் சிகிச்சைக்காக, மதுரை, உத்தங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டு அங்கு, சிதைந்த நிலையிலிருந்த மாணவனின் வலது கை அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்ட கலெக்டர் வினய், நேற்று மாலை மருத்துவமனை வந்து, மாணவன் செல்வக்குமாரை பார்த்து, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். டாக்டர்கள் கூறுகையில், பலத்த சேதடைந்ததால் வலது கை அகற்றப்பட்டுவிட்டது. மேலும், உடலில் சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஈரலில் காயம் ஏற்பட்டுள்ளது. குடல் பகுதியும், சிறுநீர் பையும் பலத்த சேதமடைந்துள்ளன. ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.