அனந்தகுமார் ஹெக்டே மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே மகாத்மா காந்தியை குறித்து சர்ச்சையான கருத்தை ஒன்றினை தெரிவித்திருந்தார்.
அவர் பேசுகையில், “மகாத்மா காந்தியை எவ்வாறு மகாத்மா என்று அழைக்கிறார்கள். அவர் நடத்திய சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம். ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டம் முழுவதுமே, ஆங்கிலேயர்களின் அனுமதியுடன், ஆதரவுடன் நடத்தப்பட்டது. தலைவர்கள் என அழைக்கப்படக் கூடியவர்கள் யாரேனும் போலீஸாரால் ஒருமுறையாவது தாக்கப்பட்டு இருக்கிறார்களா?” எனத் தெரிவித்திருந்தார்.
இது அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான அனந்த சர்மா கூறுகையில், “நாட்டுக்காக ஏராளமான தியாகங்களைச் செய்தவர்களையும், சுதந்திரப் போராட்ட இயக்கத்தையும் பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே இழிவுபடுத்தியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை பாஜக அரசும், பிரதமர் மோடியும் கொண்டாடுவது உண்மையாக இருந்தால், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வந்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விடுத்த அறிக்கையில், “விடுதலைப்போராட்ட இயக்கத்தை நாடகம் என்று பாஜக விமர்சித்துள்ளது. அவர்கள் சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை, எந்தவித தியாகங்களையும் செய்யவில்லை.
இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் உண்மையான மனநிலையை வெளிப்படுத்துகிறது. காந்தியின் பெயரை ஒரு வெளித்தோற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள், அவர் மீது மரியாதை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.