ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று தற்போது நிறைவடைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சி மட்டுமே நெடுந்தொடர்களை ஒளிபரப்பி வந்த நிலையில், அந்த தொலைக்காட்சிக்கு நிகராக விஜய் மற்றும் ஜீ தமிழ் ஆகிய இரண்டு தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். இதில் பல சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பெற்று முதல் இடத்தை பிடித்து வரும் நிலையில் சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் மிகக் குறைவான இடங்களை பிடித்து வருகின்றன. மக்களின் பேராதரவை இழந்த சீரியல்களை தொலைக்காட்சிகள் திடீரென முடித்து மூட்டை கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் தற்போது நிறைவடைய இருக்கும் செய்தி கிடைத்திருக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர்ந்தான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ குடும்பப் பின்னணியை கொண்ட காதல் கதையை மையமாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கண்மணி மனோகரன் அமுதா என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதிகண்ணம்மா’ தொடரில் கண்ணம்மாவின் தங்கையாக நடித்து பிரபலமானவர் கண்மணி. இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்’ தொடரில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நாடகம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது பார்வையாளர்களின் ஆதரவை இழந்த காரணத்தினால் விரைவில் தொடருக்கு மூடு விழா நடத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், பின்னாளில் ஆறு மணிக்கு நேரம் மாற்றப்பட்டது. ஆனால் 6:00 மணிக்கு ஒளிபரப்பாகும் மற்ற தொடர்களை காட்டிலும் இந்த தொடர் குறைவான பார்வையாளர்களைப் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் கடைசி இடம் பிடித்து வருகிறது. இதனால் இந்த நாடகத்தை முடித்து அதற்கு பதிலாக புதிய நாடகமான ‘நினைத்தேன் வந்தாய்’ சீரியலை ஒளிபரப்ப தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த செய்தியை அறிந்த சீரியல் ரசிகர்கள் சீரியலை முடிக்க வேண்டாம் என்று இயக்குனருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் சீரியல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.