நடிகர் அருண் விஜயை ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லும் காட்சிகளை தற்போது அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு என்ன ஆனது? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் திரை உலகின் 90களில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் அருண் விஜய். அதன் பின்னர் இவருக்கு ‘என்னை அறிந்தால்’ பல திருப்புமுனையாக அமைந்தது.

இந்தப் படத்திற்குப் பின்னர் அவருக்கு ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘தடம்’, ‘சினம்’, ‘யானை’ போன்ற பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைத்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மிஷன் சாப்டர் ஒன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. தற்போது கைவசம் பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் நடித்து வருகிறார். மிஷன் சாப்டர் ஒன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, இவருக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது. சண்டை காட்சிகளின் நடித்த போது எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தது.
மேலும் தசை நார்கள் கிழிந்ததால் இவரால் நடக்கக்கூட முடியாத நிலை இருந்தது. அதை தற்போது ஒரு பதிவாக போட்டிருக்கிறார் அருண் விஜய். அதில், “இரண்டு மாதங்களாக நான் அனுபவித்த இந்த வலியை நீங்கள் கொடுத்த வெற்றி மறக்கச் செய்து விட்டது. நீங்கள் காட்டும் இந்த அன்பு என்னை மீண்டும் வலிமையானவனாக மாற்றி இருக்கிறது. விரைவில் மீண்டும் தயாராகி செயலில் இறங்க இருக்கிறேன், அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார்.
உடைந்த கைகளுடன் அவர் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்வையிட வந்ததும், படத்தின் ப்ரோமோஷன் பணிகளை ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தற்போது தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. பலரும் அருண் விஜய் விரைவில் குணமடைந்து வர தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.