பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்னர் அசீம் தனது முதல் பதிவை ஷோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து “இந்த வெற்றியை உனக்காக சமர்ப்பிக்கிறேன் செல்லமே” என்று பதிவிட்டு இருக்கிறார். அவரது மகன் ரயானும் மெடலையும், டிராஃபியையும் கையில் வைத்துக் கொண்டு 50 லட்சம் காசோலையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த அழகான போட்டோவுக்கு கீழே பலரும் அசீமுக்கு வாழ்த்துக்கள் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அசீம். அவர் இதற்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சினிமா செய்திகளை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது பகல் நிலவு தான். அந்த நிகழ்ச்சியில் இவருக்கும் சிவானி நாராயணனுக்கும் இருந்த கெமிஸ்ட்ரி மூலமாக இவர்கள் இருவருக்கும் புகழ் கிடைத்தது.

இந்த பிரபலத்தை கொண்டு சிவானி நாராயணன் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். அப்போதே அசீம் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசீம் அந்த சீசனில் என்ட்ரி கொடுக்கவில்லை. தற்போது சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த சீசன் தொடங்கியது முதலே அசீம் மீது பல விமர்சனங்கள் இருந்து கொண்டே இருந்தது. சகப் போட்டியாளர்களை மதிப்பதில்லை, ஒருமையில் பேசுகிறார், தரக்குறைவாக பேசுகிறார் போன்ற பல விமர்சனங்கள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சீசன் 6 டைட்டிலை வென்று இருக்கிறார் அசீம். மேலும் 50 லட்சம் பரிசு தொகையும் வென்றிருக்கிறார். அசீமின் வெற்றி குறித்து கலவையான விமர்சனங்கள் இணையத்தில் எழுந்து வருகிறது. பலரும் அசீம் வெற்றி பெற்றது நேர்மையான முறையில் இல்லை என்று விஜய் டிவியையும், கமலஹாசனையும் திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும் அசீமின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சென்று மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.