விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா போன்ற சீரியலில் நடித்து வரும் பரத் கல்யாணின் மனைவி தற்போது உடல் நலக்குறைவால் காலமான செய்தி திரையுலகினரை உலுக்கி உள்ளது. 90களில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர் பரத் கல்யாண். இவரது மனைவி பிரியா சில மாதங்களாக கோமாவில் இருந்து வந்த நிலையில், அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார். இந்த செய்தியை சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். பரத் கல்யாண் கன்னட திரை உலகில் முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழில் ஜென்டில்மேன், ஆதிலட்சுமி புராணம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி யான ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். தற்போது பல நாடகங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலிலும், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜமீலா சீரியலிலும் நடித்து வருகிறார் பரத் கல்யாண். இந்த நிலையில் அவரது மனைவி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கூட பரத் கல்யாணின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக்கு வந்த குடும்பத்தினரின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, கொட்டும் மழையில் கூட எனது குடும்பத்தினர் சர்ப்ரைசாக சூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்திருக்கிறார்கள் என்று பகிர்ந்து இருந்தார்.
பரத் கல்யாணத்துக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் அவரது மனைவியின் மரணம் குறித்து பரத் கல்யாணின் நண்பரிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது, பேலியோ டயட் முறையை பின்பற்றியதால் சர்க்கரை நோய் அதிகமாகி அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், உடல்நிலை மோசமானதால் கோமாவில் 7 மாதங்களாக இருந்ததாகவும், 43 வயதாகும் அவர் இன்று அதிகாலை 5 மணிக்கு கார்டியாக் அரஸ்ட்டால் இறந்துவிட்டார் என்றும்,்அவருடைய தங்கை வெளியூரில் இருந்து வருவதால் நாளை காலை அவரின் இறுதி சடங்கு நடைபெறும் என்றும் தெரிவித்தார். பரத் கல்யாணத்துக்கு பலரும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.