
திரைப்படங்களில் எப்போதும் பேய் படங்களுக்கு என்றொரு தனி மார்க்கெட் உண்டு. 70களில் துவனாகி இப்போது வரையில் திரையரங்கில் இந்த படங்களுக்கு வரும் கூட்டமும் அதிகம். சமீப காலமாக தமிழ் படங்களில் பேய் படங்களுக்கு என படென்ட் ரைட்ஸ் வாங்கி வைத்துள்ளது போல, அடுத்தடுத்து பேய் படங்கள் மட்டுமே நடித்து வருபவர் நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் ராகவ லாரன்ஸ். முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, சிவலிங்கா என வரிசையாக பேய் படங்களை நடித்து அதில் மிக பெரிய வெற்றியையும் இவர் கண்டுள்ளார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, விஜயகுமார், வினீத், மாளவிகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க, வித்யாசாகர் இசையில் 2005ஆம் ஆண்டு சிவாஜி ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் ராம்குமார் தயாரிக்க வெளியான திரைப்படம் “சந்திரமுகி”. இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் இப்போதும் மறந்திருக்க முடியாது.
இந்த படம் சென்னையிலுள்ள சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனையை செய்தது. பி.வசுவின் அசத்தலான இயக்கம், மிரட்டும் நடிப்பில் அனைவரையும் கவர்ந்த ஜோதிகா, வேட்டையனாக வந்து அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்த ரஜினி, வடிவேலுவின் இன்று பார்த்தாலும் சிரிப்பை வரவைக்கும் காமெடி காட்சிகள், வித்யாசாகரின் அசாத்திய பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்துமே படத்தில் சிறப்பாக அமைய படம் அப்போது வரை வெளியான அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்து அதிகம் வசூல் செய்த தமிழ் படமாகவும் நிறைய விருதுகளையும், அதிக நாட்கள் ஓடிய தென் இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
குறிப்பாக வடிவேலும், ஜோதிகாவும் நிறைய விருதுகளை வாங்கி குவித்தனர். வடிவேலுவுக்கு சிறந்த காமெடியனாக ஃபிலிம் ஃபேர் விருது, கலைமாமணி விருது மற்றும் சிறந்த நடிகையாக ஜோதிகா ஃபிலிம் ஃபேர் விருது, கலைமாமணி விருது, தமிழ்நாடு அரசின் விருது என வாங்கி குவித்தனர். அது வரை அதிக நாட்கள் ஓடிய படமாக இருந்த தமிழ் படமான ஹரிதாஸ்(1944) படத்தின் சாதனையை தகர்த்து இந்த படம் ஓடியது.
ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமே பார்த்து பழகிய ரஜினியை ஒரு பேய் படம் கதைக்களத்தில் நடிக்க வைத்து, அதிலும் வேட்டையன் என்ற ஒரு மிரட்டலான கதாபாத்திரம் கொடுத்து மிரட்டி இருப்பார் இயக்குனர் பி.வாசு. இந்த படத்தின் வெற்றி ரஜினிக்கும் மிக முக்கியத்துவமாக பார்க்கப்பட்டது. இதற்கு முன் வெளியான பாபா திரைப்படத்தின் படுதோல்வி மூலம் ரஜினியின் மீது மிக பெரிய அளவில் விமர்சனங்களும், அவருடைய சினிமா வாழ்க்கை முற்று பெற்றதாகவும் பல்வேறான விமர்சங்களை எதிர்க்கொண்டு, அவை அனைத்தையும் இந்த படத்தின் மூலம் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் தன்னை ஒரு சூப்பர்ஸ்டாராக நிலைநிறுத்தி கொண்டார் ரஜினி.
படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வர போகும் நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகம் இப்பொது அதிகாரபூர்வமாக துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், வடிவேலு மட்டுமே இப்போதைக்கு நடிகர்களாக ஒப்பந்தமாக, எம்.எம்.கீரவாணி இசையில், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டத்தரணி செட் அமைக்கவுள்ளார். லைகா ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் படம் விரைவில் துவங்கி படமாக்கப்படவுள்ளது.