நடிகை ஜோதிகாவை வைத்து வெற்றி படம் ஒன்றை இயக்கிய இயக்குனர் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக தகவல் வெளியான நிலையில் அவரது மனைவி இது குறித்து சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். தமிழில் வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ஃபெடரிக். இவர் ஜோதிகா நடிப்பில் 2020ம் ஆண்டு வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார். அமேசான் பிரைமில் இந்த படம் நேரடியாக வெளியாகி இருந்தது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் ஜோதிகாவுக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது.

இந்த படத்தில் ஜோதிகாவுடன் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்கிய இளம் இயக்குனரான ஜே.ஜே ஃபெடரிக் தனது மனைவியை பிரிந்து விட்டதாக அறிவித்திருக்கிறார். திரை பிரபலங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் உடை அலங்காரம் செய்பவரான ஜாய் கிறிஸ்டில்டா என்பவரை ஃபெடரிக், கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். பிரிவு குறித்து ஃபெடரிக் கூறியுள்ளதாவது, “நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம், எனக்கு என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. விவாகரத்து என்பது தோல்வி கிடையாது, அடுத்த கட்டத்திற்கான புதிய ஆரம்பம்” என்று பகிர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் அவரது மனைவி ஜாய் கிறிஸ்டில்டா தற்போது பதிலுக்கு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தானும் ஃபெடரிக்கும் சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தோம், நாங்கள் இரு பாதைகளில் பயணிக்க முடிவெடுத்துள்ளோம். என்னுடைய குடும்பம், நண்பர்கள், எனக்கு தூணாக உதவிய அனைவருக்கும் நன்றி. எங்களுடைய தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு அனைவரையும் வேண்டு விரும்பி கேட்டுக் கொள்கிறேன், விவாகரத்து என்பது தோல்வி கிடையாது அது ஒரு தைரியமான முடிவு” என்று பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாக திரைத்துறையில் விவாகரத்து அதிகரித்திருக்கும் நிலையில் தற்போது இளம் இயக்குனர் ஃபெடரிக் மற்றும் அவரது மனைவி ஜாயின் விவாகரத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!