‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து நாஞ்சில் விஜயன் திடீரென விலகி விட்ட நிலையில், அவருக்கு பதிலாக புது கோமாளியாக யார் வரை இருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் சீசன் 5 சமீபத்தில் தொடங்கியது. இரண்டு வாரங்களே ஆன நிலையில், கோமாளியாக பங்கெடுத்த நாஞ்சில் விஜயன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

ஏற்கனவே நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட், முன்னாள் கோமாளிகளாக இருந்த ஜி.பி முத்து, தீபா ஷங்கர், மோனிஷா, அதிர்ச்சி அருண், பரத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவிக்கு சென்றுள்ளனர். மேலும் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி போன்ற பல நிகழ்ச்சிகளை தயாரித்து வந்த ‘மீடியா மேஷன்ஸ்’ நிறுவனமும் சன் தொலைக்காட்சிக்கு சென்று விட்டது. இருப்பினும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 5 தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரண்டாவது வாரமே நாஞ்சில் விஜயன், “விஜய் டிவிக்கும் தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ‘பாக்ஸ் ஆபிஸ்’ நிறுவனம் தயாரிக்கும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இனி நான் பங்கெடுக்க மாட்டேன்” எனக் கூறி விலகி இருந்தார். இந்த நிலையில், ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 1 சீரியலில் நடித்து வந்த நடிகை ஃபரீனா ஆசாத் புது கோமாளியாக களம் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் அவர் கோமாளியாக களம் இறங்கும் புதிய எபிசோட் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.