
கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணைக்கு வரும் 10 ஆயிரத்து 200 கனஅடி உபரிநீர் அணையின் வழியாக பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.
இதையடுத்து சத்தியமங்கலம் நகராட்சியில் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் குடியிருப்போர் பாதுகாப்பான இடத்திற்குசெல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒலி பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அழகை சுற்றுவட்டார பகுதிமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.