
காஞ்சிபுரம், நாகை மாவட்டம் சீர்காழி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் பெய்ய தொடங்கியது. மேலும், வெப்ப சலனம் காரணமாகவும் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
அதன் அடிப்படையில் நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பூம்புகார். கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில் போன்ற இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்த தொடர் கனமழையால் சம்பா சாகுபடி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலும் உத்திரமேரூர், காஞ்சிபுரம் பேருந்து நிலையம்,வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், சின்னையன்சத்திரம், ஆகிய பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்திருந்தது. இந்த மழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்றும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.