தமிழ் சினிமாவில் எப்போதும் புது புது முயற்சிகளுடன் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். கடைசியாக இவர் இயக்கி வெளியிட்ட படம் “ஒத்த செருப்பு” படம் நல்ல சிறந்த விமர்சனங்களை பெற்றது. அடுத்து இவர் அதே போல ஒரு முயற்சியில், “இரவின் நிழல்” படம் எடுத்துள்ளார். அடுத்த சாதனை முயற்சியாக உலகில் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல்.

இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றநிலையில், உலகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற VFX கலைஞர்களான காட்டலாங்கோ லியோன் மற்றும் கிரேக் மேன் ஆகியோர் இத்திரைலப்படத்தில் பணியாற்றி உள்ளனர். பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்த படத்திற்கு தடை விதிக்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்க சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘இரவின் நிழல்’ படத்தை தனது அகிரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக கூறி, நவீன் எண்டர்பிரைசஸ் பாஸ்கரராவிடம் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் வாங்கியுள்ளார். அதற்கான வாடகை பாக்கி 25 லட்சத்து 13 ஆயிரத்து 238 ரூபாயை செட்டில் செய்யாததால் ஜூலை 15ஆம் தேதி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பாஸ்கர் ராவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, வழக்கு குறித்து நடிகர் பார்த்திபன், அவரது நிறுவனம், அதன் இயக்குனரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12க்கு தள்ளிவைத்துள்ளார்.