
மகாராஷ்டிராவில் அடிக்கடி நடக்கும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களை தடுக்க வேண்டும் என்று புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான அரசு நடந்து முடிந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் அடிப்படையில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை விவசாயிகள் தங்கள் நிலங்களுக்காக வாங்கிய ரூ.2 லட்சம் வரை குறுகிய கால பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா இதற்கு எதிர்ப்புகள் தெரிவித்து வந்தது. முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று கூறிவந்த சிவசேனா தலைவர் விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியது. இந்நிலையில் புனேயில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும், தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாரும் கலந்துகொண்டு உரையாற்றிய போது,
தற்போது உடனடி நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வரை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர்களின் முழு பயிர்க்கடன் விரைவில் தள்ளுபடி செய்யப்படும் என்பதை உறுதியாக கூறுகிறேன் என்றார்.