நடிகர் பஹத் பாசில் இன்று தனது 41வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு திரைப் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவரை வைத்து கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கியிருந்த இயக்குனர் மாரி செல்வராஜ் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். பிரபல இயக்குனராக இருந்த பாசில் அவர்களின் மகனாக இருக்கும் இவர், 2002 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய கையத்தும் தூரத்து என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் திரை வாழ்க்கையை விட்டுவிட்டு படிப்பதற்காக வெளிநாடு சென்றார். பின்னர் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2009 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு திரும்பிய அவர் கேரளா கபே என்கிற படத்தில் நடித்தார். பின்னர் பல படங்களில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்த அவர், தமிழில் வேலைக்காரன் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகம் ஆனார்.

ஆனால் அதற்கு முன்பே பெங்களூர் டேஸ், கும்பலங்கி நைட்ஸ், டிரான்ஸ் போன்ற படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிட்ச்சயம் ஆகியிருந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு விக்ரம் திரைப்படம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இவர் கடைசியாக மாமன்னன் என்கிற படத்தில் ரத்தினவேலு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சாதியை தூக்கி பிடிக்கும் பலருக்கும் ரத்தினவேலுவின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துப் போயிருந்தது. பலரும் ரத்னா வேலுவை கொண்டாடிய தீர்த்திருந்தனர். இது ஒரு புறம் சர்ச்சைகள் எழுந்து தற்போது ஓய்ந்திருக்கும் நிலையில் பஹத் பாசிலின் 41வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளுக்கு மாரி செல்வராஜ் ட்விட்டர் பதிவில் தனது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் அவர், ” வணக்கம் பகத் சார்!!! உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன். மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பகத் சார்” என்று பதிவிட்டுள்ளார்.!