மழை வெள்ளம் குறித்து விமர்சித்து வீடியோ வெளியிட்டு இருந்த நடிகர் விஷாலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அதில் அவர், “வசனம் பேசி கைதட்டல் பெறுவதற்கு இது ஒன்றும் சினிமா கிடையாது, ஆக்கபூர்வமாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், அரசு செய்து தருகிறோம்” என்று பதிலடி கொடுத்திருக்கிறார். சென்னையில் 47 வருடங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. இருப்பினும் திமுக அரசு மேற்கொண்ட வடிகால் பணிகளால் பல இடங்களில் மழை நீர் தேங்காமல் ஓரளவிற்கு வடிந்து இரண்டு நாட்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி இருக்கிறது.

கன மழை பெய்யும் பொழுது தண்ணீர் தேங்குவது இயல்புதான். ஆனால் அது எப்படி வடிகிறது? அதற்கு வடிகால்கள் எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கின்றன? வடிகால் பகுதிகள் மற்றும் ஏரிகள் முறையாக தூர்வாரப்பட்டு இருக்கின்றனவா என்பதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது் அந்த வகையில் திமுக அரசு அமைந்த சில நாட்களிலேயே மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை முடுக்கி விட்டிருந்தனர். சுமார் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஓரளவுக்கு கை கொடுத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பல இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனால் நடிகர் விஷால் இதுகுறித்து விமர்சித்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், “அரசு வடித்த வடிகால்கள் சென்னையில் செய்தீர்களா? அல்லது சிங்கப்பூரில் செய்தீர்களா? 2015ம் ஆண்டு இதேபோல வெள்ளம் ஏற்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகும் இதே நிலை நீடிப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் அனைவரும் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சென்னை மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வீட்டில் நிம்மதியாக இருப்பார்கள். அவர்கள் வீட்டில் மின்விநியோகம் இருக்கும். வீட்டிற்குள் தண்ணீரும் புகுந்து இருக்காது” என்று காட்டமாக விமர்சித்து இருந்தார். இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில், “படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் ஆறு லட்சம் உணவுப் பொட்டலங்களை இதுவரை வழங்கி இருக்கிறோம்.உங்கள் வீட்டிற்கு மட்டும் வெள்ளம் வரவில்லை, ஒட்டுமொத்த சென்னை மக்களும் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும் அதில் அரசு அதிகாரிகளும் மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகின்றனர். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைதட்டல் வாங்குவதற்கு இந்த விஷயம் சாதாரணமானது கிடையாது, இது ஒரு பேரிடர், அரசியல் செய்ய முயலாமல் ஏதேனும் கோரிக்கை இருந்தால் கூறவும் அரசு உடனடியாக நிறைவேற்றித் தரும்” என்று காட்டமாக விஷாலுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O