நடிகை மீனாவிற்கு இன்று 13-வது திருமண நாள். அவருடைய கணவர் சமீபத்தில் இறந்த நிலையில், மீனா கடைசியாக தனது கணவருடன் 12-வது திருமண நாளை கொண்டாடும் போது பதிவிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மீனா. இவர் குழந்தையாக இருந்த போதே அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகியிருந்தார். வளர்ந்த பின்பு என் ராசாவின் மனசினிலே என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

பின்னர் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தெறி என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார் நைனிகா.
நன்றாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் புயல் வீசியது போல கடந்த ஜூன் 28ஆம் தேதி வித்யாசாகர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. பெங்களூருவில் அவர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் புறாக்கள் பல வளர்க்கப்பட்டு வருவதால், அதன் எச்சங்கள் நுரையீலில் அழற்சியை ஏற்படுத்தியதால் நுரையீரல்கள் செயல் இழந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட ஆறு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் வித்யாசாகர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உறுப்புகள் சரியாக பொருந்தாத காரணத்தினால், அவர் கடந்த மாதம் ஜூன் 28ஆம் தேதி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது திரையுலகினர் மட்டுமில்லாமல் மீனா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பையும், இயல்பான நடிப்பையும், தலைக்கனம் இல்லாத ஒரு நடிகையாக இருந்தவர் மீனா. அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது என்று அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர்.
இந்த நிலையில் அவருக்கு இன்று 13வது திருமண நாள். 12 ஜூலை 2009 ஆம் ஆண்டு இதே நாளில் தான் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு மீனா தனது திருமண நாளை முன்னிட்டு கணவருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, வானவில் போல் வந்து என் வாழ்வை வண்ணமயமாக்கினீர்கள், நீங்கள் எனக்கு கொடுத்த இந்த புன்னகையை நான் என்றென்றும் அணிந்திருப்பேன் என்று பதிவிட்டு இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தனது திருமண நாளை தனது கணவருடன் மிகச் சிறப்பாக கொண்டாடி வந்த மீனா அந்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வது வழக்கம். ஆனால் இந்த முறை திருமண நாளுக்கு 14 நாட்களே இருந்த நிலையில் அவரது கணவர் இறந்துவிட்ட செய்தி பலரையும் கலங்க வைத்துள்ளது.