கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான படம் தான் இரவின் நிழல். இந்த படத்தை நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கிறார். இந்தப் படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாரட் படம் என்று பார்த்திபன் கூறி வந்த நிலையில், அதற்கு மாறாக ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்திருந்தார். நடிகர் பார்த்திபன் மற்றும் பிரகிடா நடிப்பில் உருவாகி இருக்கின்ற இரவின் நிழல் படம் 96 மணி நேரத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படமாகும். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. எதிர்பார்த்த அளவை விட வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது. இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் படத்தை பற்றி நெகட்டிவாக விமர்சனங்களை கொடுத்திருந்தார். அதில் கதையும் இல்லை, திரைக்கதையும் இல்லை, ஆனால் நான் லீனியரில் எடுத்தது, சிங்கிள் ஷாட்டில் எடுத்தது என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில் எந்த நியாயமும் இல்லை என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த படம் முதல் நான. லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என்றும், ஏற்கனவே 2013 ஆம் ஆண்டிலேயே ஒரு நான் லீனியரில் ஒரு படம் வெளியாகி இருந்ததாகவும், பார்த்திபன் தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்பது போலவும் விமர்சனங்களை கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருந்த பார்த்திபன் 15 நாட்களுக்கு முன்பு அவரை அழைத்து ஸ்பெஷல் ஷோ ஒன்றை போட்டு காட்டி இருந்தேன், அப்போதாவது இது முதல் நான் லீனியர் படம் இல்லை என்று என்னிடம் கூறியிருக்கலாமே? அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்பொழுது வந்து கூறுகிறாரே? என்றும் அவரும் ஒரு ‘இயக்குனர்’ என்ற முறையில் அவர் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும் கலாய்க்கும் விதமாக பார்த்திபன் பதிலடி தெரிவித்திருந்தார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனம் பார்த்திபன் ரசிகர்களை கோபம் கொள்ள செய்தது. சமூக வலைத்தளங்களிலும், கமெண்ட்களிலும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரி ரசிகர்கள் ஒரு படி மேலே போய் ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மையை எரித்துள்ளனர். புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒரு மாலில் படம் பார்க்க வந்த நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பார்த்திபன் ரசிகர்கள் ப்ளூ சட்டையை உருவ பொம்மையை செருப்பு மாலை அணிவித்தும், செருப்பால் அடித்தும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். தொடர்ந்து அவரது உருவ பொம்மையை எரித்தும், அவரது உருவ பொம்மையை காலால் உதைத்தும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு படத்தை எடுத்து விட்டு, அதுவும் வந்த தடம் கூட தெரியாமல் எங்கேயோ முடங்கி விட்டது ஆனால் அவர் மற்றவர் எடுக்கும் படங்களை இவ்வாறு கீழ்த்தரமாக விமர்சித்து வருவது கண்டனத்திற்கு உரியது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.