Categories: சமூகம்

ஆதிக்கத்தின் எதிரி பெரியார்!

(பெரியாரின் நினைவு நாளை தொடர்ந்து சிறிய கட்டுரை)

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான போராட்டங்கள் மாணவர்கள் தலைமையிலே நடைபெறுகின்றன. இதில் டெல்லியிலும், பஞ்சாபிலும் நாம் ஒன்றை கவனித்து இருக்கலாம். போராட்ட மாணவர்களின் கைகளில் மூவர் படங்கள். இன்னும் சொல்ல போனால் மும்மூர்த்திகள்!

ஆதிக்கத்தின் எதிரி பெரியார்! 1
டெல்லியில் திரண்ட மாணவர்கள்.

ஒருவர், அகிம்சை வழியில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த மகாத்மா காந்தி. மற்றோருவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக உழைத்தவர். கூடுதலாக இந்தியாவின் ஆன்மாவாக கருதப்படும் இந்திய அரசியலமைப்பை கொடுத்தவர். இவர்களுள் உள்ள ஒத்துமையே, இவர்கள் இருவரும் வடநாட்டவர். சுதந்திர போராட்ட களத்தில் முக்கியமானவர்கள். ஆனால் மூன்றாவதாக இருப்பவர் தென்னாட்டுக்காரர்! தேசிய விடுதலை போராட்டத்தை உதாசினபடுத்தியவர். பார்ப்பனீயத்தின் சமூக சுரண்டலுக்கு எதிராகவும், பிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதை வாழ்வுக்காக போராடியவர். தனி தமிழ்நாடு கேட்டவர்.

பெரியார்

“கடவுளை வணங்குபவன்காட்டுமிராண்டி, கடவுளை பரப்புபவன் அயோக்கியன்” என்ற வசனங்களுக்கு சொந்தக்காரர். அவர் தாம் பெரியார்! காந்தியும், அம்பேத்கரும் இருக்கின்ற இடத்தில், இந்திய தேசியம் என்ற கருத்தாடலை கேள்விக்குறியாக்கி, இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என அனைத்தையும் துக்க நாளாக அறிவித்து வந்த பெரியாருக்கு; பஞ்சாபிலும், டெல்லியிலும் என்ன வேலை?

“ஒரு பெரிய நாடு இன்னொரு சிறிய நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தினால் நான் சிறிய நாட்டின் பக்கம் நிற்பேன். அந்த சிறிய நாட்டில் ஒரு பெரிய மதம் இருந்து மற்ற சிறுபான்மை மதத்தை ஒடுக்கினால் நான் சிறுபான்மை மதத்தின் பக்கமே நிற்பேன். அந்த சிறுபான்மை மதத்தில் சாதி இருந்து, இன்னொரு சாதியின் மீது தாக்குதல் நடத்தினால் நான் தாக்குதலுக்குள்ளான அந்த சாதியின் பக்கமே நிற்பேன். அந்த ஒடுக்கப்பட்ட சாதியிலிருக்கும் ஒரு முதலாளி இன்னொரு தொழிலாளியை வஞ்சிப்பானேயானால் நான் தொழிலாளியின் பக்கமே நிற்பேன். அந்த தொழிலாளி வீட்டிற்கு போய் அவன் மனைவியிடம் ஆதிக்கம் செலுத்தினால் அந்த பெண்ணிற்க்காக நான் நிற்பேன்.மொத்தத்தில் ஆதிக்கம்தான் என் எதிரி”

பெரியாரின் இந்த கருத்து தான் டெல்லியில் இன்று தூக்கிப்பிடிக்க காரணம். சட்டத்தின் பெயரால், மதத்தின் பெயரால் இஸ்லாமிய மக்கள் இந்திய சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவது என்பது, ஆதிக்க இனத்தின் கொடூர ஆதிக்க மனப்பான்மையே தவிர வேறு ஏதும் கிடையாது. இன்று இஸ்லாமிய மக்களை நோக்கி பாயும் கைகள் நாளை பிற சாதியினரனை பார்த்து பாயும் என்பதில் விழிப்பாக நாம் இருக்க வேண்டும் என்பதே டெல்லி போராட்டத்தில் பெரியாரின் இருப்பை சுட்டிக்காட்டுகிறது.

வடக்கில் அம்பேத்கரும், தெற்கில் பெரியாரும் தொடர்ந்து இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற பார்பனீயத்தின் வேர்களை அசைத்து பார்த்தனர். இதானால் தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இருவருடைய தேவை அதிகரித்து வருகிறது. சமூகத்தில் தொடர்ந்து இருந்து வரும் பிறருடைய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் பெரியார் குறித்தான வாசிப்பு நிச்சயமாக தேவைப்படுகிறது. அதனால் தான் பெரியார் தேவை படுகிறார். காரணம் அவர் ஆதிக்கத்தின் எதிரி!

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்