(பெரியாரின் நினைவு நாளை தொடர்ந்து சிறிய கட்டுரை)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான போராட்டங்கள் மாணவர்கள் தலைமையிலே நடைபெறுகின்றன. இதில் டெல்லியிலும், பஞ்சாபிலும் நாம் ஒன்றை கவனித்து இருக்கலாம். போராட்ட மாணவர்களின் கைகளில் மூவர் படங்கள். இன்னும் சொல்ல போனால் மும்மூர்த்திகள்!

ஒருவர், அகிம்சை வழியில் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்த மகாத்மா காந்தி. மற்றோருவர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக உழைத்தவர். கூடுதலாக இந்தியாவின் ஆன்மாவாக கருதப்படும் இந்திய அரசியலமைப்பை கொடுத்தவர். இவர்களுள் உள்ள ஒத்துமையே, இவர்கள் இருவரும் வடநாட்டவர். சுதந்திர போராட்ட களத்தில் முக்கியமானவர்கள். ஆனால் மூன்றாவதாக இருப்பவர் தென்னாட்டுக்காரர்! தேசிய விடுதலை போராட்டத்தை உதாசினபடுத்தியவர். பார்ப்பனீயத்தின் சமூக சுரண்டலுக்கு எதிராகவும், பிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களின் சுயமரியாதை வாழ்வுக்காக போராடியவர். தனி தமிழ்நாடு கேட்டவர்.
“கடவுளை வணங்குபவன்காட்டுமிராண்டி, கடவுளை பரப்புபவன் அயோக்கியன்” என்ற வசனங்களுக்கு சொந்தக்காரர். அவர் தாம் பெரியார்! காந்தியும், அம்பேத்கரும் இருக்கின்ற இடத்தில், இந்திய தேசியம் என்ற கருத்தாடலை கேள்விக்குறியாக்கி, இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் என அனைத்தையும் துக்க நாளாக அறிவித்து வந்த பெரியாருக்கு; பஞ்சாபிலும், டெல்லியிலும் என்ன வேலை?
பெரியாரின் இந்த கருத்து தான் டெல்லியில் இன்று தூக்கிப்பிடிக்க காரணம். சட்டத்தின் பெயரால், மதத்தின் பெயரால் இஸ்லாமிய மக்கள் இந்திய சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவது என்பது, ஆதிக்க இனத்தின் கொடூர ஆதிக்க மனப்பான்மையே தவிர வேறு ஏதும் கிடையாது. இன்று இஸ்லாமிய மக்களை நோக்கி பாயும் கைகள் நாளை பிற சாதியினரனை பார்த்து பாயும் என்பதில் விழிப்பாக நாம் இருக்க வேண்டும் என்பதே டெல்லி போராட்டத்தில் பெரியாரின் இருப்பை சுட்டிக்காட்டுகிறது.
வடக்கில் அம்பேத்கரும், தெற்கில் பெரியாரும் தொடர்ந்து இந்து மதம் என்று சொல்லப்படுகின்ற பார்பனீயத்தின் வேர்களை அசைத்து பார்த்தனர். இதானால் தான் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இருவருடைய தேவை அதிகரித்து வருகிறது. சமூகத்தில் தொடர்ந்து இருந்து வரும் பிறருடைய ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் பெரியார் குறித்தான வாசிப்பு நிச்சயமாக தேவைப்படுகிறது. அதனால் தான் பெரியார் தேவை படுகிறார். காரணம் அவர் ஆதிக்கத்தின் எதிரி!