ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நளதமயந்தி’ சீரியலிலிருந்து ஹீரோயின் பிரியங்கா நல்காரி விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்த நிலையில், தான் சீரியலில் இருந்து விலகவில்லை என்கிற அதிகாரப்பூர்வ விளக்கத்தை நடிகை பிரியங்கா நல்காரி கொடுத்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியலில் மூலமாக பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருப்பவர் பிரியங்கா நல்காரி. ‘ரோஜா’ சீரியல் ஒரு நாள் திடீரென முடிவுக்கு வந்திருந்தது.

தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சென்ற அவர் அங்கு ‘சீதாராமன்’ என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். பின்னர் அந்த சீரியல் இருந்தும் திடீரென விலகி இருந்தார். தனது சொந்த காரணங்களுக்காக விலகி இருப்பதாக அப்போது அவர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். பின்னர் சில நாட்களிலேயே மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடங்கிய ‘நளதமயந்தி’ என்கிற சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த நிலையில் கதைப்படி அவர் இறந்துவிட்டது போலவும், இத்துடன் நளதமயந்தியின் கதை முடிவுக்கு வருவதாகவும் கூறப்பட்டது.
அவருக்கு பதிலாக ‘செந்தூரப்பூவே’ போன்ற தொடர்களில் நடித்த நடிகை ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது பிரியங்கா நல்காரி அது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில், “நீங்கள் எதையாவது கற்பனை செய்து கொண்டு வதந்திகளை பரப்பாதீர்கள். நான் சீரியலை விட்டு விலகவில்லை. என்னுடைய அடுத்த அட்டவணைக்காக நான் காத்திருக்கிறேன் இந்த நேரம் பார்த்து இப்படி செய்தி பரவுகிறது.
ஏன் இப்படி செய்தி பரவுகிறது? இதற்கு என்ன காரணம்? என்பதெல்லாம் குறித்து நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்” என அவர் கூறியிருக்கிறார். இதனால் சீரியல் குழுவினருடன் ஏதும் சண்டையா? என்ன நடக்கிறது என தெரியாமல் ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.