வடிவேல் பாலாஜி அவர்கள் இறந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. இதை தனது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ள புகழ், அவர் குறித்து ஒரு சிறிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்தப் பதிவை எழுதும் போது தன்னுடைய கண்கள் கலங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1975 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்து வளர்ந்த பாலாஜி வாய்ப்புக்காக சென்னைக்கு வந்தார். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலுவைப் போலவே உடை அணிந்து கொண்டு, அவர் போலவே பேசுவதால் ‘வடிவேலு பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, சிரிச்சா போச்சு, கலக்கப்போவது யாரு என்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு தனது காமெடி திறமையை வெளிப்படுத்தினார் வடிவேல் பாலாஜி. சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் இவர் லிப்டிலிருந்து வந்தாலே அனைவரும் சிரித்து விடும் அளவிற்கு இவர் கெட்டப் அவ்வளவு காமெடியாக இருக்கும்.

இவருக்கு ஜோதிலட்சுமி என்கிற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு வடிவேல் பாலாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சைக்கு செலவு அதிகமானதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை மாற்றினர். பின்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து தனது 45 வது வயதில் காலமானார். இவர் கோலமாவு கோகிலா, யாருடா மகேஷ் உள்ளிட்ட சில படங்களிலும் காமெடி ரோலில் நடித்துள்ளார். திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பல கனவுகளோடு வந்த அவர், எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தது அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சின்னத்திரை உலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த நிலையில் அவரின் இரண்டாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் புகழ் தனது instagram பக்கத்தில், ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நீ எங்களுடன் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது நீ இல்லை என்று நாங்கள் நினைக்கவில்லை. எப்போதும் எங்களுடனே நீ இருப்பது போல் இருக்கிறது மாமா, என் வாழ்க்கைக்கு வழிகாட்டிய நீ முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே, இதை எழுதும்போது என் கண்கள் கலங்குகிறது. மிஸ் யூ மாமா என்று பதிவிட்டுள்ளார். புகழை சின்னத்திரையில் அறிமுகப்படுத்தியது வடிவேல் பாலாஜி தான் என்று பல பேட்டிகளில் புகழே கூறியிருக்கிறார். தான் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டபோது வடிவேல் பாலாஜி தான் தனக்கு வாய்ப்புகளை வாங்கி கொடுத்தார் என்று புகழ் பலமுறை கூறியிருக்கிறார்.