
2009ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “வெண்ணிலா கபடிகுழு”. பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்குனராக அறிமுகமான இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமானார். கிஷோர், சரண்யா மோகன் என பலர் நடித்த திரைப்படத்தில் வெறும் பரோட்டாவை சாப்பிட்டே மக்களிடம் மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் சூரி. இவரை இந்த படம் ஒரு காமெடி நடிகராக மக்களிடம் அறிமுகப்படுத்தியது. அதற்கு முன் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி, இந்த படத்திற்கு பின் பரோட்டா சூரியாக மாறினார்.
அதற்கு பின் வெளியான நடிகர் விமலின் “களவாணி” படத்தில் தனி ஒரு காமெடியனாக ஜொலித்தார். பிறகு தொடர்ந்து நான் மகான் இல்லை, தூங்காநகரம், குள்ளநரி கூட்டம், போராளி, நடிகர் விஜயுடன் வேலாயுதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, சுந்தரபாண்டியன், தேசிங்கு ராஜா என அடுத்தடுத்த படம் நடித்தாலும் இவருக்கு மீண்டும் ஒரு சிறப்பான கதாபாத்திரம் தேவைப்பட்டது.
அப்போது வெளியான படம் தான் நடிகர் சிவகார்த்திகேயனின் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இயக்குனராக பொன்ராம் அறிமுகமான இந்த படத்தில் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு இணையாக நடித்து காமெடியில் அதோகலம் செய்து மீண்டும் மக்களிடையே நல்லதொரு காமெடியனாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். இந்த படம் தான் சிவகார்த்திகேயன்-சூரி இருவருக்கும் முதல் முறையாக காமெடியில் கலக்கிய படம். இதற்கு முன்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மனம் கொத்தி பறவை படங்களில் நடித்திருந்தாலும் அதில் முதல் நாயகன் விமல், இரண்டாவது நாயகனாக தான் சிவா இருப்பார். சிறப்பாக பேசப்பட்ட போஸ்பாண்டி-கோடி இணையாக நடித்து இருவரும் பல விருதுகளையும் வாங்கி குவித்தனர்.
பின்னர் சூரி, விஜய், அஜித், ரஜினி, விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, சிம்பு, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தன்னை ஒரு மிக பெரிய காமெடியனாக நிலைநிறுத்தி கொடுள்ளார். இன்றளவும் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்தில் இவர் நடித்த “புஷ்பா புருஷன்” ரசிகர்களுக்கு மிகவும் ஃபவர்ட். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் கூட்டணி எப்போதும் ரசிகர்களை கவர தவறியதில்லை.
“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தை தொடர்ந்து இருவரும் “ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, டான்” என நடித்த அனைத்து படங்களுமே இருவரது காமெடிக்காக சிறப்பாக வரவேற்கப்பட்ட படங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தானே செதுக்கி கொண்ட சூரி இப்பொது இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் “விடுதலை” என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். பல முறை தேசிய விருதினை வாங்கி குவித்த வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி முதல் முறை கதாநாயகனாக நடிக்க அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க, மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.
மதுரை சேர்ந்த நடிகர் சூரி அங்கு சொந்தமாக “அம்மன் உணவகம்” என்ற பெயரில் ஒரு சைவ உணவகத்தை நடத்தி வருகிறார். பல்வேறு வகையிலான சமூகபணிகளிலும் தன்னை சத்தமில்லாமல் ஈடுபடுத்தி கொண்டுள்ளார் நடிகர் சூரி. அண்மையில் இவர் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மேல் கொடுத்த பண மோசடி வழக்கு இப்பொது சூடுபிடித்துள்ளது. உண்மையாகவே இவரை ஏமாற்றியதாக விஷ்ணு விஷாலின் தந்தை மேல் குற்றஞ்சாட்டுகள் பல ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு வருவதால், விரைவில் அவர் கைது செய்யபப்டுவார் என தெரிகிறது.
இப்படி இருக்கும் நிலையில் இப்பொது சூரியின் மீது மற்றொரு புகார் ஒன்று சமூகவலைத்தளங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது மதுரையை மையமாக கொண்ட LM அறக்கட்டளை என்ற நிறுவனம் நடிகர் சூரியின் கீழ் நடப்பதாகவும், இந்த ஆண்டு அதாவது 2022/23 ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பான கல்வி உதவி தொகைகள் வழங்கப்படுவதாகவும், அதனை எப்படி பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்ற முறையையும் கொடுத்துள்ளது இந்த விளம்பரம்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ள நடிகர் சூரி, அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இது போன்ற எந்த வித விளம்பரங்களும் என் சார்பில் கொடுக்கப்படவில்லை, இது நான் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம், அதனை இவ்வாறாக தவறாக சித்தரித்து விளம்பரம் செய்துள்ளார்கள். அந்த விளம்பர தரர்களை நாங்கள் நேரில் அழைத்து கண்டித்துள்ளோம், இது போன்ற தவறை மீண்டும் செய்தால் போலீசில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர்களுக்கு தெரிவித்துள்ளோம். நாங்கள் செய்யும் உதவிகள் எங்கள் தனிப்பட்ட முறையில் நடக்கிறது. அதற்கு இவ்வாறான விளம்பரங்கள் நாங்கள் கொடுப்பதில்லை. புனிதமான கல்வியை இவ்வாறாக கொச்சைப்படுத்த வேண்டாம்” என பதிவிட்டுள்ளார்.