ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் தொடர்ந்து வரவேற்பை பெற்றறு ரூ.600 கோடியை வசூலித்து வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறது. தற்போது அடையாறு கேன்சர் மருத்துவமனைக்கு சென்றுள்ள கலாநிதி மாறன் மனைவி புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்காக 60 லட்சம் ரூபாயை வழங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘ஜெயிலர்’. இந்த திரைப்படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்திற்குள் ரூ.600 கோடி வசூலை குவித்து மகத்தான சாதனை படைத்திருந்தது.

இதனால் மனமகிழ்ச்சியில் இருக்கும் கலாநிதி மாறன் ரஜினிக்கு காசோலையும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 ரக காரையும் பரிசாக வழங்கினார். தொடர்ந்து இயக்குனர் நெல்சனுக்கு காசோலையும் போர்சே ரக காரையும் வழங்கினார். அதேபோல இசையமைப்பாளர் அனிருத்துக்கும் காசோலையும் காரும் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் கலாநிதி மாறனின் மனைவி காவேரி கலாநிதி 100 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக ஒரு கோடி ரூபாய் நிதியை அப்பல்லோ நிறுவனத்தின் தலைவர் பிரதாப் பெட்டியை நேரில் சந்தித்து காசோலையை வழங்கி இருந்தார். இந்த செய்தி வைரலான நிலையில் பலரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை பாராட்டினர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் துணைத் தலைவர்களாக இருக்கும் டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் டாக்டர் ஹேமந்த் ராஜை நேரில் சந்தித்துள்ள காவேரி கலாநிதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ரூ.60 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார். இந்த செய்தியை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. பலரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை வாழ்த்தி வருகின்றனர்.!