Categories: அரசியல்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!

வெளியிட்டது
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!! 1

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும்.ஆனால் தேர்தல் அவ்வாறு நடத்தப்படாததால், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்திக் கொண்டது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சிப்பணிகள் முடங்கி விட்டது .இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது என உத்தரவிடக் கோரி வக்கீல் ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது வளர்ச்சிப் பணிகளுக்கு தடையாக உள்ளதாகவும், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆணை வெளியிட தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு அக்டோபர் இறுதி வாரம் வரை அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கை ஜூலை 17-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு, மாநில தேர்தல் ஆணையம் அக்டோபர் இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு விட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வார்டு வரையறை வேலைகள் நிறைவடைந்து விட்டதாகவும், மராட்டியம், அரியானா சட்டசபை தேர்தல்கள் காரணமாக மாநில தேர்தல் ஆணையத்திடம் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முதல் கட்ட சோதனை நடத்துவது தாமதம் ஏற்பட்டதாகவும், அந்த சோதனை முடித்த பிறகு உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க கூடுதலாக 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்குமாறு ஜூலை 17-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி மாநில தேர்தல் ஆணையத்தின் மீது மூல வழக்கின் மனுதாரர் வக்கீல் ஜெயசுகின், சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்தநிலையில், நீதிபதி தீபக் குப்தா தலைமையிலான அமர்வு முன்பு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கோர்ட்டில் ஆஜரானார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் நரசிம்மா வாதாடுகையில், மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல்களால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த காலதாமதம் ஏற்பட்டது என்றும், தற்போது அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விட்டதால் டிசம்பர் முதல் அல்லது 2-வது வாரத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

அப்போது தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோர் குறுக்கிட்டு, தமிழகத்தில் தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடையாமல் அவசரகதியில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த முயற்சிப்பதாகவும், ஏற்கனவே தொகுதி மறுவரையறை தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் கூறினார்கள்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகள் முழுமை பெறாத நிலையில் உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்த முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர்கள், இந்த வழக்கோடு தாங்கள் தொடர்ந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.மனுதாரர் ஜெயசுகினின் வக்கீல் வாதாடுகையில், மாநில தேர்தல் ஆணையம் தொடர்ச்சியாக காரணங் களை கூறி உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதாக முறையிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை வருகிற டிசம்பர் 13-ந் தேதிக் குள் வெளியிடவேண்டும் என்றும், அது குறித்த அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.அத்துடன், அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க உரிய அமர்வில் பட்டியலிடுவதற்கு பரிந்துரைப்பதாக கூறி, வழக்கை டிசம்பர் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்