வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகி விட்டதாக பாலா தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் பாலாவுடன் இணைந்து வணங்கான் என்கிற படத்தில் நடித்து வந்தார். ஆரம்பம் முதலே பாலாவுக்கும் சூர்யாவிற்கும் ஏதோ பிரச்சனை என்றும், சூட்டிங் சில நாட்களாக நடைபெறவில்லை என்றும் தகவல்கள் வந்து கொண்டிருந்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது பாலாவே ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது வணக்கம் என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய படத்தை இயக்க விரும்பினேன்.

ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களில் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்று ஐயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்த கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்ம சங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகுந்த வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.
நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி வணங்கான் படப்பிடிப்பு பணிகள் தொடரும் என்று பாலா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். வணங்கான் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்புகள் தொடரும் என்பதால் சூர்யாவிற்கு பதிலாக வேறு ஒரு நடிகர் இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாலாவே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.