‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவிற்கு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்திற்கு பின்னர் விபத்து குறித்து தனது ட்விட்டர் தளத்தில் சூர்யா உருக்கமான பதிவு ஒன்றைக் பகிர்ந்திருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் பல இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது சென்னையில் உள்ள பிவிஆர் ஃபிலிம் சிட்டியில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

இதில் நடிகர் சூர்யாவின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பின் போது ரோப் கேமரா திடீரென கீழே விழுந்ததில் சூர்யாவின் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் படுகாயம் அடைந்த சூர்யா உடனடியாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. பெரிய காயங்கள் எதுவும் இல்லை, தலையில் விழுவதற்கு சில தூரமே இருந்ததால் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியானது. இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியான போது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.
சூர்யாவிற்கு என்ன ஆனது? என்று சமூக வலைதளத்தின் மூலமாக தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு சூர்யா தனது உடல்நிலை குறித்து ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், “அன்பான நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்” அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.