
திரிஷா 96 படத்திற்கு பிறகு திருஞானம் இயக்கத்தில் நடித்துள்ள படம் பரமபதம் விளையாட்டு. இந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த படத்திற்கு முதலில் பரம பதம் என்று பெயர் வைக்கப்பட்டது. பின்னர் பரமபதம் விளையாட்டு என்று மாற்றப்பட்டது.
இந்த படத்தில் திரிஷா ஒரு டாக்டராகவும் குழந்தைக்கு தாயாகவும் தனது கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். திகில் படமாக எடுக்கப்பட்ட இந்த படம் திரிஷா பணிபுரியும் மருத்துவமனையில் அரசியல்வாதி ஒருவரின் கொலை நடக்கிறது. அந்த கொலைக்கு திரிஷா சாட்சியாக வருவதும் இதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தான் கதை.
இந்த படத்தை சென்ற வருடமே திரையிட திட்டமிட்டு இருந்தது. பின்னர் ஜனவரி 31-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போதும் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. வரும் 28-ந்தேதி திரைக்கு வருகிறது என்று தற்போது படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படத்தை நடிகை நமீதா பாராட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு நடிகையும் பரமபதம் விளையாட்டு படத்தில் திரிஷா நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து திரிஷா ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இந்த படமும் விரைவில் திரைக்கு வருகிறது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.