நடிகை வனிதா விஜயகுமாரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடுமையாக தாக்கி, முகத்தில் காயங்களுடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளாக இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார். பல ஆண்டுகளாக இணையத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வந்த அவர், பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் பின்னர் இணையத்தில் அவரை பேட்டி எடுப்பது, சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளராக தனது மூத்த மகள் ஜோவிகாவை அனுப்பி வைத்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவிற்கு பிக் பாஸ் சீசன் 7ல் பல அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ரெட் கார்டு கொடுத்து பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் பிக் பாஸ் குறித்து தொடர்ந்து தனியார் youtube தொலைக்காட்சி ஒன்றில் பேசி வருகிறார் வனிதா விஜயகுமார். அதில் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தது குறித்து தனது பார்வையை முன் வைத்திருந்தார். இதுகுறித்து பேசியதற்காக தாக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முகத்தில் இரத்த காயங்களுடன், கண் பகுதிகள் அனைத்தும் வீங்கி அவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
புகைப்படத்திற்கு கீழே அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “பிக் பாஸ் விமர்சனத்தை முடித்த பின், இரவு உணவை முடித்துவிட்டு எனது தங்கை சௌமியா வீட்டின் அருகே நிறுத்தியிருந்த கார் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் என் முன் வந்து தன்னை பிரதீப்பின் ஆதரவாளர் எனக் கூறிக் கொண்டார். மேலும் “ரெட் கார்டு கொடுக்கிறீர்களா? அதற்கு நீ வேற சப்போர்ட் பண்றியா” எனச் சொல்லி அவர் என்னை கடுமையாக தாக்கினார். வலியால் நான் கத்தத் தொடங்கினேன். அந்த நேரத்தில் என்னை சுற்றி யாரும் இல்லை. இரவு ஒரு மணி என்பதால் எனது தங்கையை கீழே வரச் சொல்லி அழைத்தேன். அவர் இதை போலீசில் உடனடியாக கூறும்படி கூறினார்.
ஆனால் அந்த செயலில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்பதால் நான் அதை செய்யவில்லை. அதன் பின்னர் நான் முதலுதவி எடுத்துக் கொண்டேன். என்னை தாக்கியவர் யார் என்பது எனக்கு தெரியவில்லை. அவன் என்னை பார்த்து பைத்தியம் போல சிரித்தான். இனி சில நாட்களுக்கு நான் திரையில் தோன்றப் போவதில்லை. இடையூறுகளை ஆதரிப்பவர்களுக்கு ஆபத்து ஒரு அடி தூரத்தில் இருக்கிறது” என்று சொல்லி பதிவிட்டு இருக்கிறார் பலரும் வனிதாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கண்டிப்பாக இது குறித்து காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.!
Twitter Original Source From: Vanitha Vijayakumar