தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் அஜித், இவர் திரைத்துறைக்கு வந்து 30 வருடங்கள் கடந்து விட்டது. இந்த நிலையில் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கத்தில் அவரை புகழ்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், திரைத்துறையில் நுழைந்து இன்று உச்சநட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் அஜீத்குமார். இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் நடிகர் அஜித். பின்னர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்று தான் அழைப்பார்கள். இவர் படம் வெளியாகும் பொழுது அஜித் ரசிகர்கள் அதை திருவிழா போல் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

அஜீத் தற்போது தனது 61வது படமான ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை படம் சரியாக ஓடாத காரணத்தால், மீண்டும் அதே இயக்குனர் எச்.வினோத்துடன் கை கோர்த்து ஏகே61 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனிகபூரே தயாரித்து வருகிறார். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படம் ஆக்சன் படமாக இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டில் ஆரம்பத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவு முடிந்துள்ள நிலையில், எஞ்சிய பகுதிகளின் படபடப்பிற்காக அவர் ஹைதராபாத்திற்கும் சென்னைக்கும் அடிக்கடி சென்று வருகிறார். இதற்கிடையே நடிகர் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
2022 ஆம் ஆண்டின் கடைசியில் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இந்த வருட இறுதியில் இதற்கான படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது. ஏகே 62 படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த நிலையில் அஜித்தின் 30 ஆண்டுகால திரைப்பயணம் இன்றோடு முடிகிறது. அதை பாராட்டி விக்னேஷ் சிவன் ஒரு ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், 30 வருட தன்னம்பிக்கை, ஆர்வம், இரக்கம், பணிவு, விடாமுயற்சி, கடின உழைப்பு இந்த மனிதனை 30 ஆண்டுகளாக நம் மனதை ஆள வைத்துள்ளது. இன்னும் பல வருடங்கள் உங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் நாங்கள் இருக்க வேண்டும். நன்றி டியர் அஜீத் சார்.! என்று பதிவிட்டுள்ளார்.