நடிகர் விஜய் ஆண்டனி மறைந்த தனது மகள் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் நடிகராக உயர்ந்தவர் விஜய் ஆண்டனிழ நடிகர் இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மையாளராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், சென்னை ஆழ்வார்பேட்டை சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மீரா மற்றும் லாரா என்கிற இரண்டு பிள்ளைகளும் பாத்திமா என்கிற மனைவியும் இருக்கிறார். இதில் மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் 19ம் தேதி மின்விசிறியில் தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்து கொண்டார்.

தகவல் அறிந்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உடலை வீட்டிற்கு எடுத்து வந்த விஜய் ஆண்டனி இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்தார். மீராவின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவர் சில ஆண்டுகளாக மன அழுத்தத்திற்காக மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வந்ததும் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனக்கு மிகவும் மன அழுத்தமாக இருப்பதாக தான் ஆலோசனை பெற்று வரும் மருத்துவரிடம் வாட்சப்பில் உரையாடி இருப்பதும் தெரியவந்தது.
பலரும் மீராவின் மறைவுக்கு ஆறுதல் சொல்லி வரும் நிலையில் விஜய் ஆண்டனி தற்போது பதிவு ஒன்றை போட்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அன்புள்ள நெஞ்சங்களே என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது இந்த உலகை விட சிறந்த சாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை வன்மம் இல்லாத ஓர் அமைதியான இடத்துக்கு தான் சென்றிருக்கிறாள். என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள் – உங்கள் விஜய் ஆண்டனி” என்று பதிவிட்டுள்ளார்.
Twitter Original Source From: Vijay Antony