சென்னையில் ‘மிக்ஜாம்’ புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில் தற்போது விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இயக்க நிர்வாகிகள் அனைவரும் அரசுடன் இணைந்து உதவிகளை செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் சென்னையில் பெருமழை கடந்த இரண்டு நாட்களில் கொட்டி தீர்த்தது.

மழை விட்ட பிறகும் வெள்ள சேத பாதிப்புகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. பல இடங்களில் தண்ண்ர் தேங்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கொசுக்களின் பெருக்கம், வீடுகளில் பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் நுழைவது, படுக்க இடமில்லை, பால் கூட கிடைக்காமல் பல மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஹரிஷ் கல்யாண் போன்றோர் நிதி உதவி கொடுத்து வருகின்றனர். பல நடிகர்கள் தெருக்களில் இறங்கி மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அதுபோல விஜய் மக்கள் இயக்கத்தினர் பலரும் இன்று காலை முதலே உணவு சமைத்துக் கொண்டு தெருத்தெருவாக சென்று விநியோகம் செய்து வந்தனர்.
குறிப்பாக புஸ்ஸி ஆனந்த் தலைமையில், பலருக்கும் அடுப்பு, போர்வை, அரிசி, மளிகை சாமான், குடை உட்பட பல பொருட்கள் சென்னையின் முக்கிய பகுதிகளில் வழங்கப்பட்டது. தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்து வரும் நிலையில் தற்போது விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கை கோர்ப்போம், துயர்துடைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Twitter Original Source From: Vijay