நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இன்று தமிழகம் எங்கிலும் உள்ள 800 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. கோப்ரா திரைப்படம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் பல தடைகளால் தற்போது தான் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை செவன் ஸ்கீரின் நிறுவனம் தயாரிக்க உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்ஃபான் பதான், மிருனாளினி ரவி, மீனாட்சி, ரோஷன் மேத்யூ போன்ற பலர் நடித்துள்ளனர். படம் மிக நன்றாக இருப்பதாக காலை முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் கூறினர். மேலும் ட்விட்டரிலும் நல்ல ரெஸ்பான்ஸ் வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது? படத்தின் கதை என்ன? என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

கணக்கு வாத்தியாராக வேலை பார்த்துக் கொண்டிருப்பவர் மதியழகன் (விக்ரம்). இவர் உலக நாடுகளில் இருக்கும் சில முக்கியமான தலைவர்களை தன்னுடைய கணக்கு உத்திகளின் மூலமாக காசுக்காக கொலை செய்கிறார். மதியழகன் யார்? எதற்காக இந்த கொலைகள் செய்கிறார்? இதற்கு பின்னால் இருக்கும் சதி என்ன? என்பது குறித்து எல்லாம் தெரியவில்லை. வில்லனாக வரும் ரோஷன் மேத்யூ தனக்கு எதிராளியாக இருப்பவர்களை கொல்ல திட்டமிடுகிறார் அதற்கு விக்ரமை பயன்படுத்திக் கொள்கிறார் ஆனால் விக்ரம் தான் இந்த கொலைகளை செய்கிறார் என்பதே ரோஷன் மேத்யூவுக்கு தெரியாது. கணக்கு வாத்தியாராக இருக்கும் மதியழகன் ஆக வரும் விக்ரம் இது இந்த கொலைகளை சீக்ரெட்டாகவே செய்து வருவார். இதனால் மண்டையை குழப்பிக் கொண்டிருக்கிறது காவல்துறை.
இப்படியான சூழ்நிலையில் வில்லன் ஒருநாள் போலீசில் மாட்டிக் கொள்கிறார் அப்பொழுது இந்த தொடர்பில் இருக்கும் அனைவரையும் கொலை செய்யுமாறு அவர் சொல்கிறார் இதில் விக்ரமும் மாட்டிக்கொள்கிறாரா அவர் வில்லனிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் மீதி கதை. அப்போது விக்ரம் பற்றிய தகவல்களை திரை மறைவில் இருக்கும் ஒருவர் காவல்துறைக்கு கொடுக்க ஆரம்பிக்கிறார். அந்த மர்ம நபர் யார்? அவருக்கும் விக்ரமுக்கும் என்ன தொடர்பு? இப்படி பல முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்க தொடங்கி அதற்கு விடை சொல்லும் படமாக இருப்பது தான் கோப்ரா.இந்தப் படத்தின் பலமாக பார்க்கப்படுவது விக்ரமின் நடிப்புதான். கதை, திரைக்கதைகளில் இயக்குனர் கவனம் செலுத்தினாரோ? இல்லையோ? ஆனால் மொத்த பொறுப்பையும் விக்ரமிடம் ஒப்படைத்து இருக்கிறார். தனது அசாத்தியமான நடிப்பால் அந்நியன் படப்பாணியில் இரண்டாவது பாதியில் தன்னுடைய மிக அசாதாரணமான நடிப்பினால் கைதட்டலை பெறுகிறார் சீயான்.
அதேபோல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இர்ஃபான் பதான் அறிமுகமாக நடிகராக இருந்த போதிலும் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஸ்ரீநிதி செட்டி வழக்கம் போல காதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். விக்ரம் செய்யும் கொலைகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மாணவியாக இருக்கும் மீனாட்சி இர்ஃபான் பதான் ரோலில் நியமித்திருக்கலாம், அந்த அளவிற்கு தன்னுடைய உழைப்பைகொடுத்திருக்கிறார் மீனாட்சி. மிருனாளினி ரவி, ரோபோ சங்கர், ஆனந்தராஜ் போன்றவர்கள் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படத்தின் முதல் பாதையில் ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்ய அமைச்சர் என பாதுகாப்புகளை மீறி அசால்ட் ஆக கொலை செய்து விடுகிறார் விக்ரம். லாஜிக் என்றால் என்னவென்று தெரியாத அளவிற்கு இந்த கொலைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் கணிதத்தை வைத்து ஒருவர் கொல்லப்படுவதும், அந்த கணித முறைகள் குறித்து விளக்கம் செய்யும் காட்சிகள், திணிக்கப்பட்ட காதல் காட்சிகள் போன்றவற்றால் முதல் பாதையில் கோப்ரா படம் சுமாராகவே இருக்கிறது என்று சொல்லலாம். மேலும் முதல் பாதியில் வரும் திருப்பம், இடைவேளையில் வரும் திருப்பங்கள் தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது. இரண்டாவது பாதையில் தொடக்கத்தில் வரும் சண்டை காட்சிகள் சிறிது சலிப்பை ஏற்படுத்துகின்றன.
மேலும் ஒவ்வொரு புதிராக அவிழ்க்கப்படும்போது சுவாரஸ்யம் ஏற்படுவதற்கு பதிலாக குழப்பங்களும் கேள்விகளுமே எழுகின்றன. கதை புரிந்து கொள்வதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. நிறைய தேவையற்ற காட்சிகள், கதைக்கு தேவையற்ற நிறைய கதாபாத்திரங்கள் என்று பார்ப்பவர்களின் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு இரண்டாம் பாதி இருக்கிறது. படத்திலிருந்து வெளியே வந்த பலரும் சொல்வது கடைசியில் யார் யாரை கொல்கிறார்கள் என்பதே ஒன்றுமே புரியவில்லை என்றும், படத்தின் நீளம் மிகப்பெரிய துயரமாக அமைந்தது என்றும் மூன்று மணி நேரம் கதைக்கு தேவையில்லாத காட்சிகளை வெட்டி இரண்டு மணி நேரமாக ஆக்கி இருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். மேலும் ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருந்த போதிலும், படத்தின் சுவாரஸ்யமின்மையால் இசை அவ்வளவாக பேசப்படவில்லை. மொத்தத்தில் கோப்ரா சீறி படம் எடுக்கும் என்று பார்த்தால் அது ஊர்ந்து நெளிந்து அமைதியாக சென்று விட்டது. TamilGlitz Rating – 2.5/5