குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் விஜே விஷால் எலிமினேட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறார். அந்த அதிர்ச்சியான தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வரை சுமார் மூன்று சீசசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சி நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. விஜய் டிவி மட்டுமல்லாது சின்னத்திரை உலகில் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் முதலிடமும் பிடித்திருக்கிறது. இந்த சீசன் 10 குக்குகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஆறு குக்குகள் மட்டுமே சமைத்து கொண்டிருக்கின்றனர். இதுவரை நான்கு பேர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். வெளியேறிய நான்கு பேருமே ஆண் போட்டியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இரண்டாவதாக யாரும் எதிர்பாராத விதமாக நன்றாக சமைத்த மதுரை காளையன் வெளியேற்றப்பட்டார். மூன்றாவதாக ராஜ் ஐயப்பன் வெளியேறிய நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் போட்டியில் நடந்திருக்கிறது. வழக்கம் போல் வெங்கடேஷ் பட் சொல்வது போல இது ஒரு நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்துதான் ஆக வேண்டும், எனவே யாராவது ஒருவர் வெளியேறித்தான் ஆக வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த முறை விஜே விஷாலை எலிமினேட் செய்து வெளியேற்றியுள்ளனர். இந்த வாரம் நடந்த வடநாட்டு உணவுகள் போட்டியில் கடைசி மூன்று இடங்களில் ஷெரின், சிவாங்கி மற்றும் விஜே விஷால் ஆகியோர் இருந்தனர். இந்த நிலையில் மூன்று பேருக்கும் பிரக்கோலி வைத்து உணவு ஏதாவது செய்து தர வேண்டும் என்று நடுவர்கள் கூறினர்.
அதன்படி மூன்று பேரும் பிரக்கோளியை வைத்து ஒரு உணவு ஒன்றை சமைத்துக் கொடுக்க, அதில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கி விஜே விஷால் தற்போது வெளியேறி இருக்கிறார். இந்த வெளியேற்றம் யாருமே எதிர்பாராமல் நிகழ்திருந்தது. முதலில் ஷெரின் காப்பாற்றப்பட்ட நிலையில் கடைசி இடத்தில் சிவாங்கி மற்றும் விஷால் ஆகிய இருவரும் நின்றிருந்தனர். அப்போது விஷால் குறைந்த மதிப்பெண் வாங்கி இருப்பதாகவும், எலிமினேட் செய்யப்படுவதாகவும் செஃப் தாமு அறிவிக்க, அவர் கலங்கிய கண்களுடன் வெளியேறினார் அவர் வெளியேறுவதை பார்த்து புகழ், ஜி பி முத்து, குரேஷி, ஷெரின், விசித்ரா, மோனிஷா உள்ளிட்ட பலரும் கண் கலங்கி அழுதனர்.
நெட்டிசன்கள் சிலரோ சிவாங்கியை காப்பாற்றுவதற்காக விஜே விஷாலை வெளியே அனுப்பி விட்டதாக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். ஏற்கனவே இதேபோல் சிவாங்கி கடைசி இடத்தில் நின்றிருந்த போது அவர் காப்பாற்றப்பட்டு மற்றொரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது